தமிழ்நாட்டின் மின்சார துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் செந்தில் பாலாஜி. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் இவர் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின் கைது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?


இதையடுத்து, ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, ஜாமின் மனு கோரி செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி என இரண்டு தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டது. பின்னர், இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கின் வாதங்களை ஏற்கனவே நீதிபதிகள் கேட்டுவிட்டதால் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? என்று அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் உள்ளனர்.


இன்று தீர்ப்பு:


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த ஓராண்டாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டி ஜாமின் கோரிய போதும் அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. மேலும், அவர் தனது அமைச்சர் பதவியையும் தொடர் அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்தார்.


செந்தில் பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறை அவரை கடந்தாண்டு கைது செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்கா்க செந்தில் பாலாஜி கடந்தாண்டு அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.