சூடானில் இருந்து மீட்கப்பட்ட 18 தமிழர்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் சூடானில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி விமான நிலையம் வந்தடைந்ததை அடுத்து பின் அங்கிருந்து சென்னை வந்தனர். 


முன்னதாக, சூடானில் உள்நாட்டுப் போர் நிலவும் நிலையில் அங்கு  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்படி 500 இந்தியர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.


சூடானில் கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆட்சி அதிகாரத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தலைநகர் கார்த்தோமில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வன்முறையில் ஒரு இந்தியர் உட்பட சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர்.


இதனிடையே, சூடானில் சிக்கியுள்ள சுமார் 3 ஆயிரம் இந்தியர்களை பத்திரமாக மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு கூறியிருந்தது. இது தொடர்பாக அமெரிக்கா, சவுதி அரேபியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 21-ஆம் தேதி உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சூடானில் சிக்கியவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.


பின்னர், சூடானில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2, சி-130ஜெ ரக விமானங்களும், சூடானின் முக்கிய துறைமுகத்தில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமேதா கப்பலும் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது.


இந்நிலையில், இந்தியர்கள் உட்பட பல்வேறு நட்பு நாடுகளைச் சேர்ந்த 66 பேரை சூடானிலிருந்து விமானம் மூலம் மீட்கப்பட்டதாக சவுதி அரேபியா அண்மையில் தெரிவித்தது. தொடர்ந்து டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகம் ஒரு வாரத்திற்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு 5 இந்தியர்கள் உள்ளிட்ட 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்டதாக தெரிவித்தது. 


இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  தனது ட்விட்டர் பக்கத்தில், “‘ஆபரேஷன் காவிரி’ திட்டத்தின் மூலம் சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கி உள்ளது. இதன்படி, 500 இந்தியர்கள் சூடான் துறைமுகம் வந்தடைந்துள்ளனர். அவர்கள் அங்கு ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் சுமேதா கப்பல் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர் என பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் ஆபரேஷன் சூடான் திட்டத்தின் கீழ் சூடானில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.