இலங்கை- இந்திய கடலோர எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தும் அவலம் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று வேதாரண்யம் அருகே அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவரான கலைச்செல்வன் தலையில் குண்டு பாய்ந்தது. இதனால், அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை சக மருத்துவர்கள் உடனடியாக நாகை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கே மீனவர் கலைச்செல்வன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீனவர்கள் மீது நடத்தப்படும் துப்பாக்கிச்சூட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மீனவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.