ஒரே நாளில் 22 தமிழக மீனவர்களையும் நான்கு விசைப்படகுகளையும் சிறைப்பிடித்துள்ளது இலங்கை கடற்படை. 


கடந்த ஒரு வார காலமாக புயல் அச்சத்தால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், மீன்பிடிக்க செல்லாமல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் படகுகளை கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தி இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று மீண்டும் 7 நாட்களுக்கு பிறகு கடலுக்குச் சென்றனர்.


இந்த நிலையில் நேற்று மதியம் மன்னார் கடற்பரப்புக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாக கூறி ஒரு விசைப்படகை சிறைப்பிடித்து அதிலிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்களை கைது செய்தனர்.


இதே போல, புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைபட்டினம் துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடூந்தீவு கடற்பரப்பில் வைத்து மேலும் 3 விசைப்படகுகளையும் அதிலிருந்த 14 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படை மீனவர்களை  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.


இவர்களை இன்று காலை யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து முழு விசாரணைக்கு பின் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக தெரியவந்துள்ளது.


அதேபோன்று மன்னார் கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்டுள்ள எட்டு ராமேஸ்வரம் மீனவர்களையும் இலங்கை மன்னார் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து அவர்கள் மூலம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


கடந்த ஒரு வாரம் கழித்து வாழ்வாதாரம் காக்க நேற்று மீண்டும் கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்களை  வெவ்வேறு இடங்களில் வைத்து இலங்கை கடற்படையினர் 22 பேரை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில்  மவுனம் காக்கும்  மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து  நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் வலுவான கோரிக்கையாக உள்ளது.