தமிழ் நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தும்  பலரை தாக்கியும் உள்ளது. இந்த சம்பவம் மீனவர்களிடத்தில் பெரும் கவலையையும் அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், கடற்பகுதியில் இந்திய நாட்டிற்குரிய  எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்களா அல்லது நாகப்பட்டினம், புதுக்கோட்டை  பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற முழு விவரம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


14 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு முன்னதாக ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அந்தோணியார் அடிமை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீதும் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளனர். அந்த விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற  8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு தற்போது மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சமவம் குறித்து மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


15 பேர் விடுதலை


 இதற்கு முன்னதாக ராமேஸ்வரம் மீனவர்களை கடந்த நவம்பர் மாத 5ஆம் தேதி சிறுவன் உட்பட15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும், அவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்திய விசைப் படகுகள் மற்றும் வலைகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள மன்னார் நீதி மன்றத்தில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 15 மீனவர்களையும் மன்னார் நீதி மன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். விசாரணைக்குப் பிறகு, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 


ஏற்கனவே மழை காராணமாக மீன் பிடிப்பதில் சிக்கலைச் சந்தித்து வரும் மீனவர்களுக்கு நாளுக்கு நாள் இலங்கை கடற்படையினரால் ஏற்படும் பாதிப்புகள் என்பது அதிகரித்து வருவதால் மீனவர்களின் பாதுகப்பு கேள்விக் குறியாகியுள்ளது.  15 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும், 14 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 14 பேரின் குடும்பத்தினர் இவர்களைப் பிரிந்து மிகவும் கவலையில் உள்ளனர்.