கரூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் துவக்கி வைத்தார். கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 1935-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 87 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கியம்.




கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் பருத்தி, பட்டு சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்தமான இரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.




தற்போது, உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் புடவை இரகங்கள் விற்பனைக்கு உள்ளது. மேலும், பாரம்பரிய ரகங்களை புதுப்பிக்கும் விதமாக கண்டாங்கிச் சேலைகள், செட்டிநாடு சேலைகள், கைத்தறி சுங்கிடி சேலைகள், பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளன.  




மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக லினன் சட்டைகள், லினன், பருத்தி சட்டைகள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளருக்காக விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். இதில் ரூபாய் 50 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.