Special Buses: வார இறுதி நாட்கள், விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு 1,250 சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறப்பு பேருந்துகள்:


தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.


குறிப்பாக பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின்போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில், இந்த வாரம் இறுதி நாட்கள், விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள் ஆகியவை கருத்தில் கொண்டு 1,250 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


1,250 சிறப்பு பேருந்துகள்:


இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "இந்த வார இறுதி நாளான சனிக்கிழமை (16/09/2023) மற்றும் ஞயிற்றுக் கிழமை சுபமுகூர்த்த (17/09/2023) நாட்களை தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 18/09/2023 அன்று திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகள். சுபநிகழ்ச்சிகளுக்கு செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன்படி முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பேருந்துகளை போக்குவரத்துக் கழகங்கள் இயக்க திட்டமிட இயலும் மற்றும் பயணிகள் சிரமமின்றி பயணிக்கவும் பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதுடன் இன்றைய தேதியில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய் கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர்.


கூடுதல் பேருந்துகள்:


இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்நாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 15/09/2023 அன்று 19,268 பயணிகளும், 16/09/2023 அன்று 11,471 பயணிகளும் மற்றும் 17/09/2023 அன்று 7,773 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர்.


தற்போது. பயணிகள் எந்தவித சிரமமின்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 15/09/2023 அன்று தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகளும், 16/09/2023 அன்று 200 பேருந்துகளும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை. மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகள் என ஆக மொத்தம் 1,250 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


முன்பதிவு:


இதுமட்டுமின்றி, 18/09/2023 திங்கட்கிழமை அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 11,929 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.