விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த  அழகன்குப்பம் கிராமத்தில் 19 மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் இருந்த அதிமுக அரசு  ரூ.235 கோடி மதிப்பில்  மீன்பிடித் துறைமுகம் கட்ட அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கிய நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தில் தொடரப்பட்ட  வழக்கை தொடர்ந்து இந்த கட்டுமானப்பணியை திமுக அரசு நிறுத்தியுள்ளது.


இதனால் கோட்டக்குப்பம், மற்றும் மரக்காணம் காவல் நிலைய, எல்லைக்குட்பட்ட 19 கிராம மீனவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் 40 கி.மீட்டர் தூரம் கடல் பரப்பளவு உள்ள பகுதியில் பெரிய படகுகளை நிறுத்த எந்த வசதியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்:


அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இந்த வழக்கை முறையாக கையாளாமல் திமுக அரசு அதனை ரத்து செய்தது கண்டித்தும், விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உட்பட மக்கள் நலத்திட்டங்களை முடக்கும் திமுக அரசை கண்டித்து அம்மாவட்ட அதிமுக செயலாளரும் எம்.பியுமான சி.வி.சண்முகம் தலைமையில் மரக்காணம் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.


காழ்ப்புணர்ச்சி:


இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி சிவி.சண்முகம் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 4 ஆயிரம் படகுகள் பயன்படுத்தும் 50 ஆயிரம் மீனவ குடும்பத்தினர் படகுகளை நிறுத்த முடியாமலும் பராமரிக்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர் சென்னையை விட்டால் அடுத்தது புதுச்சேரியில் தான் மீன் பிடித்துறைமுகம் அமைந்துள்ளது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் வேறு ஒருவரைக்கொண்டு வழக்கை போட்டு வனங்கள் பாதிக்கப்படும் என திமுக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதிமுக அரசு மீதான காழ்ப்புணர்சியோடு தான் இந்த திட்டத்தை நிறுத்தியுள்ளது.


உதயநிதிக்கு ஸ்பெல்லிங் தெரியுமா?


எந்த திட்டம் போட்டாலும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் என்ன பயன் கிடைக்கும் என்று தான் திமுக அரசு நினைக்கின்றது. கடலில் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் அமைக்க மட்டும் அனுமதி பெறும் திமுக, அரசு மீன் பிடிப்படகு நிறுத்துமிடத்திற்கு கட்டுமானப்பணியை துவக்க சட்டரீதியாக ஏன் எதிர்கொள்ளவில்லை என கேள்வியெழுப்பினார்.


உதயநிதிக்கு கச்சத்தீவிக்கு ஸ்பெல்லிங் தெரியுமா? வரலாறு தெரியுமா? தாத்தா தாரை வார்த்து கொடுத்த வரலாறு தெரியுமா? குலத்தொழில் என்கின்றனர் கோபாலபுரத்தில் தான் குலத்தொழில் உள்ளது. திமுக தொண்டர்கள் அடிமைகளாக உள்ளார்கள். குலத்தொழிலை கடைபிடிக்கும் ஒரே கட்சி திமுக இவர்கள் யாரையும் பேச தகுதியில்லை. மிஸ்டர் உதயநிதி, மிஸ்டர் உதயநிதி இது சூட்டிங் பாயிண்ட் இல்லை நீ அமைச்சர். மதங்களை இழிவுப்படுத்தும் வேலையினை செய்து வருகின்றாய். மதத்தை புண்படுத்துகின்ற வேலையினை அமைச்சர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக விழுப்புரத்தில் கொண்டு வந்த பல்கலைக்கழகத்தை மூடிவிட்டனர். கூனிமேட்டில் 1500 கோடி ரூபாய் செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கொண்டுவந்தார். அதையும் திமுக அரசு ரத்து செய்தது. இப்படி காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் திமுக அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும்' என சிவி.சண்முகம் பேசினார்.