கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டத்தை மறு ஆய்வு செய்யும்படி தமிழக அரசுக்கு  தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகேயுள்ள தழங்காடு கிராமத்தில்  டி.எஸ்.பிராபர்டிஸ் (D S Properties) மற்றும் இந்திரா புராஜக்ட்ஸ் (Indira projects) ஆகிய நிறுவனங்கள் இணைந்து. உருவாக்கிய 545 வீட்டு மனைகளுக்கு  தமிழக அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய  அனுமதியை எதிர்த்து சென்னை அண்ணா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் அந்தோனி ராஜ் வில்லியம்ஸ் என்பவர் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால்  அமர்வு, விதிகளை மீறி வீட்டுமனை திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.

 

மேலும், கடலில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள இடத்தை கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் இரண்டாவது பகுதியாக தவறாக குறிப்பிட்டுள்ளதாக மனுதாரர் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதால்,  2011ம் ஆண்டு விதிகள்படி வகுக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் தொழில்நுட்ப ரீதியாக மறு ஆய்வு  செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

 

கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டத்தை மறு ஆய்வு செய்யும்பணியை தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மேற்பார்வையிட்டு, ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

 

தற்போதைய வழக்கு தொடர்பான இடம் மட்டும் அல்லாமல், நகர்புறம் மற்றும் நகர்புறமாக மாற்றப்பட்ட கடலோர பகுதிகளிலும் கடலோர ஒழுங்குமுறை மண்டல பகுதியை நிர்ணயிக்க வேண்டும் எனவும், திட்ட அனுமதி கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை கடலோர ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டத்தின்படி மட்டும் பார்க்காமல், அந்த பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து மத்திய - மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும் எனவும் தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது.