Sekar Babu - Tamilisai: தமிழ்நாடு வெள்ள பாதிப்பு தொடர்பாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் விமர்சனங்களுக்கு, அமைச்சர் சேகர் பாபு பதிலடி தந்துள்ளார்.


”திராவிட மாடல் திண்டாடும் மாடலாகிவிட்டது” - தமிழிசை செளந்தரராஜன்:


தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் வந்த தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தென் மாவட்டங்களுக்கு எப்பொழுதுமே மகிழ்ச்சியான தருணத்தில் தான் வருவேன் இன்று சோகமான மன கஷ்டமான தருணத்தில் தான் வந்துள்ளேன்.  மழை பெய்த 16ம் தேதியிலிருந்து தொடர்ந்து கவனித்து வருகிறேன். எனது ஆழமான கருத்து மாநில அரசின் இந்த சூழ்நிலையை எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முன்னேற்பாடுகளையும் சரியாக எடுத்திருக்க வேண்டும்.  சிலர் வானிலை ஆய்வு மையத்தை குறை சொல்கிறார்கள். சென்னையில் ஒரு அனுபவம் இருக்கிறது சொல்வதை விட அதிகமாக மழை பெய்கிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு இங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என்றார்.


இங்குள்ள திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறிவிட்டது.  நான் நேரடியாகவே முதலமைச்சரிடம் கேட்கிறேன். பதினெட்டாம் தேதி மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர்  சந்திக்க வேண்டுமா, இல்லையென்றால் மக்களோடு முதலமைச்சர் என கோயம்புத்தூரில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. கூட்டணிக் கட்சிக்காக டெல்லி சென்று விட்டார். பிரதமரை பார்க்கத்தான் சென்றதாக கூறுகிறார்.


”தென்மாவட்டங்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை”


மழை நீரை சேமிப்பதற்கோ.. செய்யக்கூடிய மழை நீரை வருங்காலத்திலும் விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு அரசு என்ன முயற்சி எடுத்தது. மத்திய அரசை குறை கூறுவது விட்டுவிட்டு மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மக்கள் இந்த வெள்ளத்தில்  தங்களது வாழ்க்கையை இழந்து இருக்கக்கூடிய சூழலில் முதலமைச்சர் இந்த மாவட்டத்தில் செலவழித்த நேரம் எவ்வளவு. முதலமைச்சர் இங்கே இருக்க எத்தனை மணி நேரம் செலவழித்தார். தென் மாவட்ட  மக்களை மாற்றாந்தாய் மனப்பமையுடன்  தமிழக அரசு நடத்துகிறது” என தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.


”ஆளுநர் வேலைய பாருங்க” - அமைச்சர் சேகர் பாபு:


இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம், தமிழிசையின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “முதலில் பாண்டிச்சேரியின் ஆளுநர் வேலையை முதலில் அவர்களை பார்க்கச் சொல்லுங்கள். பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக மாற வேண்டாம் என சொல்லுங்கள். அவர்களுக்கு இருக்கும் பணியை பார்க்க சொல்லுங்கள். தமிழ்நாட்டில் எங்காவது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேண்டும் எனபது அவரது விருப்பமாக உள்ளது. நிச்சயமாக எங்கு போட்டியிட்டாலும், தமிழக மக்கள் அவருக்கு தோல்வியை தான் பரிசாக கொடுத்து இருக்கிறார்கள். மீண்டும் தோல்வியை தான் பரிசாக தருவார்கள். ஆகவே, பண்டிச்சேரியின் ஆளுநர் அந்த பொறுப்பிற்கான பணிகளை மேற்கொள்வது நல்லது” என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.