தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்டவைகளில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன. அவை சரிவர வழங்கப்படுகிறதா என்பது குறித்து மேலாண்மை செய்ய புதிய குழு அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடிப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது சமூக நீதி கண்காணிப்பு குழு தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சமூக நீதி கண்காணிப்பு குழுவில் சுப.வீரபாண்டியன் தலைமையில் 8 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். வேலை, கல்வி, அலுவலகம், அரசு, என எல்லா இடங்களிலும் சமூக நீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக பின்பற்றப்படுகிறதா என இந்த குழு கண்காணிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.



அண்மைக்காலமாக சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றுவதில்லை எனவும் சமூக நீதி தேய்பிறையாகி வருவதாகவும் புகார்கள் எழும் நிலையில், சமூக நீதியை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக கடந்த அக்டோபரில் வெளியான அறிக்கையில், சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் “சமூகநீதிக் கண்காணிப்பு குழ“ அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் என்றும், சமூக நீதியை எப்படி அந்தந்த துறைகளில் செயல்படுத்துவது என்று வழிகாட்டும் என்றும், செயல்படுத்த தவறும் பட்சத்தில் அதில் தலையிட்டு செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த குழுவின் தலைவராக சுப. வீரபாண்டியன் இருப்பர் என்றும் கூறப்பட்டிருந்தது. 



இந்த குழு இந்த பணிகளை மேற்கொள்வதோடு இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும், இக்குழுவில் அரசு அலுவலர்கள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் இடம் பெறுவார்கள் எனவும் சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளை ஒட்டி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கீழ்காணும் தலைவர் மற்றும் உறுப்பினர்களளை நியமனம் செய்து “சமூகநீதிக் கண்காணிப்பு குழுவினை“ அமைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் உத்தரவிட்டார். அதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. இந்த 8 பேர் கொண்ட குழுவிற்கு சுப. வீரபாண்டியன் தலைமை வகிக்கிறார். உறுப்பினர்களாக கவிஞர் மனுஷ்யபுத்திரன், தனவேல், முனைவர் சுவாமிநாதன், தேவதாஸ், ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ. கருணாநிதி ஆகியோர் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.