கல் குவாரி முறைகேடு தொடர்பாக தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் துரை முருகன் பதவி விலக வேண்டும் என கரூரில் சமூக ஆர்வலர் முகிலன் பேட்டியளித்தார்.


 




தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தனது ஆதரவாளர்களுடன், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். மனுவில் கரூர் மாவட்டத்தில் 300 குவாரிகளுக்காக 500 கிராம மக்களை அகதிகளாக மாற்றக் கோரி, அடாவடி கோரிக்கை வைத்து போராடும் கல்குவாரி ஒப்பந்ததாரர்கள் மற்றும் கிரசர் உரிமையாளர்களின் அராஜக போராட்டத்தை அரசு புறக்கணிக்க வேண்டும். எம்.சாண்டுக்கு மாற்றாக வெளி நாட்டு இயற்கை ஆற்று மணலை மாதம் 15 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முகிலன், “கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த சிவாயத்தில் செயல்படும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் கல்குவாரி 2019ம் ஆண்டு உரிமம் முடிந்த நிலையில், ரூபாய் 23 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


 




 


கற்களை வெட்டி எடுக்க வெடி மருந்தை எங்கிருந்து பெற்றார். வெடி மருந்து சட்டப்படி அவர் கைது செய்யப்பட வேண்டும், அரசு சம்பளம் பெறும் சட்டமன்ற உறுப்பினரோ, அவரது ரத்த உறவுகளோ அரசு ஒப்பந்தம் பெறக்கூடாது என்பது தான் சட்டம்.  2020 நவம்பர் 16 அன்று எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் விழுப்புரத்தில் பேசிய போது, மானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மகனுக்கு உரிமம் கொடுத்ததை காரணம் காட்டி, அன்றைய தொழில் துறை அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். அதே போல சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மகனுக்கு அனுமதியை அரசு கொடுத்துள்ளதால், கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் 100 கோடி ரூபாய் கனிம வள குவாரிகளில் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. சட்டவிரோதமாக அனுமதி கொடுத்த நிலையில், அவர் இனியும் அமைச்சராக தொடரக் கூடாது” என்றார்.


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.