தனியார் செய்தி நிறுவனமான தி நியூஸ் மினிட் செய்தியாளர் சாரதா – 22 டெங்கு மற்றும் டைபாய்டு காரணமாக நேற்று உயிரிழந்தார்.  


சாரதா சென்னை பிரிவில் பணியாற்றி வந்தார். அவர் சாரதா பிப்ரவரி 2021 இல் TNM இல் சேர்ந்தார். தினசரி சினிமா பிரிவில் பணிபுரிந்தவர். அவர் தனது பல கதைகளில் தமிழ் சினிமாவை விமர்சித்தார், மனநலப் பிரச்சினைகளை தவறாக சித்தரிப்பது, ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக பெண்களை அவமானப்படுத்துவது, பாலினப் பாகுபாடு போன்றவற்றை முக்கியமாக தனது செய்தியில் பிரதிபலித்தார்.


 சமீபத்தில் அவர் டெங்குவால் பாதிக்கப்பட்டார். அதோடு டைபாய்டும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


இவரின் இழப்பு பற்றி தி நியூஸ் மினிட் நிறுவனர் தன்யா ராஜேந்திரன் தனது ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் ”என்னுடைய சக ஊழியர் @சாரதா_உ இனி இல்லை. அமைதியான நபர், ஒரு துடிப்பான எழுத்தாளர், மென்மையாக பேசுபவர், மற்றும் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட ஒருவர். இது சாரதாவுக்கு மிகவும் பிடித்த அவரது புகைப்படம். அவளுக்கு வயது 22"  என குறிப்பிட்டிருந்தார்.  






இந்த பதிவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் சாரதா பற்றிய நினைவுகள், அவரது செய்திகள் எதனை பிரதிபலித்தது என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர்.  இந்த பதிவிற்கு ஒருவர் “ சாரதாவும் நானும் எப்போதுமே தொடர்பில் இருந்திருக்கிறோம். பொன்னியின் செல்வன் பற்றிய திரைப்பட விமர்சனம் குறித்து மிகவும் பெருமையடைந்ததாக சாரதா குறிப்பிட்டார்” என பதிலளித்துள்ளார்.      






இது போன்ற இழப்புகள் மிகவும் வேதனை அளிக்கிறது என சக செய்தியாளர்களும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.