சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற விசாரணை முடியும் வரை, வழக்கை தள்ளி வைக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
செந்தில் பாலாஜி தரப்பு மனு என்ன.?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கு, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்ததாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளரான கார்த்திகேயன் என்பவர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உதவியாளர் கார்த்திகேயன் தரப்பில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, எம்பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி உள்ளிடோர் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை எதிர்ப்பு - மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி
இந்நிலையில், அவ்வாறு வழக்கை தள்ளி வைத்தால் விசாரணை பாதிக்கப்படும் என, அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். இது செந்தில் பாலாஜி தரப்பிற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.