பெரியார் குறித்த பொது விவாதத்துக்கு தயார் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெரியார் தத்துவங்களை மட்டும் பேசி வாக்கு சேகரிக்க எந்த தலைவராவது தயாரா? பெரியார் குறித்து பொது விவாதத்துக்கு தயார்.

பொதுவிவாதத்துக்கு இருகரம் நீட்டி தயாராக உள்ளேன். பெரியார் என்ன சமூக நீதி செய்யார்? பெண்ணுரிமை பற்றி பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி உள்ளது. வள்ளுவர், பாரதியார் ஆகியோர் பெண்ணுரிமைக்காக பேசியுள்ளனர். திராவிட எதிர்ப்பு என்று பேசினால் ஆரியம் உள்ளே வந்துவிடும் என பேசுகிறார்கள். ஆரியத்தோடு கைகோர்த்துக்கொண்டு எதிர்ப்பதாக பெரியாரும் அண்ணாவும் கூறினர். 

பெரியார் மணியம்மையை திருமணம் செய்தபோது ஆரியர் ராஜாஜியை துணைக்கு அழைத்தார். திராவிடத்தை ஆதரித்த பெரியார் ஆரியத் தலைமையுடன் நட்புடன் இருந்தார். வள்ளலார், அய்யா வைகுண்டர் போல என்ன புரட்சியை செய்தார் பெரியார். 

1962ஆம் ஆண்டு தேர்தலில் ராஜாஜியின் கட்சியுடன் அண்ணா கூட்டணி வைத்தார். அம்பேத்கர், பெரியாரின் கொள்கைகள் ஒன்று என நிரூபிக்க என்னுடன் விவாதிக்கத் தயாரா? “ எனக் கேள்வி எழுப்பினார். 

மேலும் பேசிய அவர், “பெரியாருக்கு மொழி, நாடு அபிமானம் கிடையாது. அதனால் அவர் மீது எங்களுக்கு அபிமானம் கிடையாது. ஆரியர் ஜெயலலிதாவிற்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டத்தை வழங்கியவர் கி.வீரமணி”  எனத் தெரிவித்தார். 

முன்னதாக பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை பேச்சு மிகப்பெரிய விவாதத்தை தமிழகத்தில் உண்டு பண்ணியுள்ளது.  இதற்கு முன்பு பேசிய சீமான் “பெரியார் பற்றி தெளிவில்லாமல் ஆதரவு தெரிவித்தேன். இப்போது தெளிவாகிவிட்டேன்; வள்ளலாரைவிட பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? திராவிடம் என கூறுபவர்கள் எல்லாம் திருடர்கள்.

பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை; பெரியார்தான் எல்லாம் செய்தார் என்றால் எப்படி?  மறைமலை அடிகள், வஉசி, இரட்டைமலை சீனிவாசன் எல்லாம் இல்லையா?; 2008-ல் என் தலைவரை சந்திக்கும்வரை நானும் இந்தக் கூட்டத்தில்தான் ஒருவனாக இருந்தேன். அவரைச் சந்தித்த பிறகுதான் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகிறேன்

தமிழ் மொழியை மிகவும் மோசமாகப் பேசியவர் பெரியார். எந்த நிலையில் தமிழ் மொழிக்காக நின்றிருக்கிறார். மொழியை விட்டுக்கொடுத்து சமூக சீர்திருத்தம் என என்ன இருக்கிறது?” என கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து அவருக்கு பல அரசியல் கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், சீமான் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குபதிவும் செய்துள்ளன.