வேலூர் தொரப்பாடி ராம்சேட்நகரை சேர்ந்தவர் பாலாஜி வயது (42). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மோகனப்பிரியா வயது (40), வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்களுக்கு மகதி வயது (12) என்ற மகள் உள்ளார். பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார்.பாலாஜி நேற்று அதிகாலை சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதிக்கு சென்றார். அதனைத்தொடர்ந்து காலை 8 மணியளவில் உஷாராணி திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் உள்ள கோவிலுக்கும், மோகனப்பிரியா 9 மணியளவில் வீட்டின் கதவை பூட்டிவிட்டு மூஞ்சூர்பட்டில் நடந்த கோவில் திருவிழாவை காண மகள் மகதியுடன் சென்றதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு உஷாராணி வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் உள்ளே மற்றும் படுக்கையறை வாசலில் மிளகாய் பொடி தூவப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் படுக்கை அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைப்பெட்டிகள் ஆங்காங்கே காலியாக சிதறி கிடந்துள்ளது.


பீரோவில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து உஷாராணி உடனடியாக பாலாஜி, மோகனப்பிரியா மற்றும் காவல்துறையினருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாகாயம் ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான காவல்துறையினர் விரைந்து அங்கு சென்று பார்வையிட்டு உஷாராணி மற்றும் அக்கம், பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மோகனப்பிரியா வீடு திரும்பினார். அவரிடமும் காவல்துறையினர் விசாரித்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், பாலாஜியின் குடும்பத்தினர் வீட்டில் இல்லாததை நன்கு அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து நகையை திருடியது தெரிய வந்தது. இதற்கிடையே திருப்பதிக்கு சென்ற பாலாஜி சாமி தரிசனம் செய்யாமல் மாலை 6.30 மணியளவில் வீடு திரும்பினார்.


 




 


இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண்ஸ்ருதி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். சிறிதுநேரத்தில் மோப்பநாய் சாரா வரவழைக்கப்பட்டது. மர்மநபர்களின் தடயங்களை மோப்பம் பிடித்த சாரா சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிச்சென்று தொரப்பாடி சுடுகாட்டின் அருகே நின்றது. நகையை திருடி விட்டு மர்மநபர்கள் சுடுகாட்டின் அருகே இருந்து வாகனம் மூலம் தப்பி சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். வேலூரில் பட்டப்பகலில் ஆசிரியரின் வீட்டில் 70 பவுன் நகை திருட்டுப்போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.