தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேகமாகப் பரவிவரும் காய்ச்சலால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருவது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. எவ்வித ஆக்கப்பூர்வமான நோய்த்தடுப்பு நடவடிக்கையையும் எடுக்காத தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.


மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பருவநிலை மாறுதல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் வேகமாகப் பரவுகிறது. குறிப்பாகக் குழந்தைகளிடத்தில் கடுமையான காய்ச்சல் பரவி வருவதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். காய்ச்சல் குறித்த பயமும், பீதியும் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், நிகழும் உயிரிழப்புகள் அச்சத்தை இன்னும் அதிகமாக்குகின்றது. வேகமாகப் பரவி வருவது எவ்வகைக் காய்ச்சல் என்பதை அறிய முடியாமலும், அதிலிருந்து குழந்தைகளைக் காக்கும் வழிமுறைகள் தெரியாமலும் மக்கள் தவித்து வருகிறார்கள்.






காய்ச்சல் பாதித்தவர்களால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ள நிலையில், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரபடுத்தாமல், காய்ச்சல் வேகமாகப் பரவவில்லை என்றுகூறி குழந்தைகளின் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு சுகாதாரத்துறையின் அணுகுமுறை மிகத்தவறானது. குழந்தைகள் உயிர் பறிபோனாலும் பரவாயில்லை, ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு எவ்வித களங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஆட்சியாளர்கள் நினைப்பது கொடுங்கோன்மை மனப்பான்மையாகும்.


எனவே, தமிழகத்தில் பரவி வரும் விசக்காய்ச்சலை கட்டுப்படுத்தி, அதனால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக விடுமுறை அளிப்பதோடு, சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்து, பெற்றோர்களின் அச்சத்தைத் தீர்க்கும் விதமான பாதுகாப்பு விளக்கங்களையும், முன்னெச்சரிக்கை தகவல்களையும் உடனடியாக வெளியிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.


மேலும், நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் தமிழக கிராமங்கள் தோறும் தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதோடு, அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடுமிடங்களில் கபசுர குநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் தமிழர் பாரம்பரிய மருந்துகளைப் போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் எனறு குறிப்பிட்டுள்ளார். 


 


மேலும் அவர், மியான்மரில் தவித்து வரும் தமிழர்களை மீட்க, இந்திய அரசை வலியுறித்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், வெளிநாடு வேலை என்றுகூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட 15க்கும் மேற்பட்ட தமிழர்கள் மியான்மார் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது. தமிழர்களை மீட்பதில் இந்திய ஒன்றியத் தூதரகம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.






தற்போது மியான்மார் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.