கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு பத்து நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவிவந்தது . அதேபோல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு  குணம் அடைந்தவர்களுக்கு பூஞ்சை நோய்த்தாக்கம் ஏற்பட்டு வருகிறது. கொரோனா நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. 

 


இதற்கிடையில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த்தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி இருக்கின்றது. இந்நிலையில், கொரோனா பாதித்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையின் பொழுது கருப்பு பூஞ்சை தாக்கம் இல்லாமல் இருந்தது . ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையில் கருப்பு பூஞ்சை தாக்கம் இந்தியா முழுவதும் அதிகரித்து உள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய்க்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். 


 

கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த டாஸ்மாக் மேலாளர் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே உள்ள அமைந்தக்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 40 . இவர் மாம்பாக்கம் டாஸ்மாக் மதுபான கடையில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வாரம் ரமேஷுக்கு உடல்நலக்குறைவு பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பிய பிறகு சில நாட்களில்  ரமேஷுக்கு இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது.
  

 


இதையடுத்து, அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ரமேஷுக்கு கருப்புப்பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  மேலும் அவரது இடது கண் அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று  உயிரிழந்தார்.


அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த   வில்வராயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முரளி அரைப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் முரளி கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். முரளிக்கு திடீரென வலது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கருப்பு பூஞ்சை நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இன்று காலை 6 மணி அளவில் கண்ணில் வலி அதிகமான நிலையில் சிகிச்சை அவர் பலனின்றி உயிரிழந்தார்.

 


இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 நபர்கள் கருப்பு பூஞ்சை நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது . செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு டாஸ்மாக் மேலாளர் மற்றும் இன்று டாஸ்மாக் விற்பனையாளர் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தாக்கத்திலிருந்து மீள முடியாமல் தவித்துவரும் இந்நிலையில் கருப்பை பூஞ்சை நோயும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.