Savukku Shankar: சவுக்கு சங்கர் வீட்டில் புகுந்து சரமாரி தாக்குதல்.. தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள் யார்.?
சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக, தனது எக்ஸ் தள பக்கத்தில், அவரே போட்டோ மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

யூ ட்யூபர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் இன்று காலை புகுந்த தூய்மைப் பணியாளர்கள் போல் வந்தவர்கள், தனது வீட்டிற்குள் சாக்கடை மற்றும் மலத்தை கொட்டியதுடன், தனக்கும் செல்போன் வாயிலாக கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சமூக வலைதள பக்கத்தில் போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
தனது எக்ஸ் தள பக்கத்தில் சவுக்கு சங்கர் கூறியுள்ளது என்ன.?
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள சவுக்கு சங்கர், இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளர்கள் என கூறிக்கொண்டு வந்த 50 பேர், தனது வீட்டின் மீது சரமாரி தாக்குதல் நடத்திவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, அவர் வெளியே கிளம்பிய 5 நிமிடங்களில் வந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பாத்திரங்கள் மீது சாக்கடை மற்றும் மலத்தை கொட்டியதாக கூறியுள்ளார். மேலும், அங்கு நடப்பவை குறித்து தனது தாயாரிடம் கேட்பதற்காக செல்போனில் தொடர்பு கொண்டபோது, அந்த போனை வாங்கி வீடியோ கால் செய்து, வந்தவர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்ததாகவும், ஒரே ஒரு உதவி ஆய்வாளரும், ஒரு காவலரும் மட்டுமே வந்ததாகவும், காலை முதல் போராட்டம் நடத்தியவர்கள் அங்கேயே இருப்பதாகவும், 12 மணியளவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு, அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்துவதாக தெரிவித்துள்ளார் சவுக்கு சங்கர்.
தாக்குதல் சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனது தொடர் பேட்டிகள் மூலம் பல்வேறு தரப்பினர் மீது குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் முன் வைத்து வரும் நிலையில், அவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.