கரூர் எஸ்பி சுந்தரவதனம் ஐபிஎஸ் புகாரின் பேரில் சவுக்கு சங்கர் இன்று இரவு கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சவுக்கு சங்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 






யூடியூபர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்திலும், தனியார் யூடியூப் சேனல்களிலும் முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், செந்தில்பாலாஜி, காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சோர்சஸ் என்ற பெயரில் வெளியிட்ட அவரது பல கருத்துகள் மற்றும் முதலமைச்சரின் உடல்நலம் குறித்த அவரது கருத்துகள் திமுகவினரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றிய கருத்துகளுக்காக சமீபத்தில் தான் நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு அபராதம் விதித்திருந்தது. இந்நிலையில் அவர் இன்று இரவு கைது செய்யப்படலாம் என்ற தகவலை சவுக்கு சங்கரே வெளியிட்டுள்ளார்.



இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கரூர் எஸ்பி சுந்தரவதனத்தின் புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் இன்று இரவு கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. செந்தில்பாலாஜியின்  சகோதரர் அசோக்கின் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையின் போது வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது குறித்து சவுக்கு சங்கர் அவதூறாக பேசியதாக எஸ்பியின் புகாரில் கூறப்பட்டுள்ளது. 


அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு சுந்தரவதனம் தீவிரமாக உதவினார், தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததோடு, உண்மையான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் இரண்டு நாள்களில் வெளியே வர உதவியுள்ளார்.


இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றால், இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையில் சுந்தரவதனத்தின் பெயரும் இடம்பெறும். தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு பிணை வழங்கப்பட்டதற்கு எதிராக வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் திங்கள்கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது என்று கூறியுள்ளார்.


மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு எதிராக தவறான தகவலை வெளியிட்டு கடுமையாக விமர்சித்திருந்த பாஜக நிர்வாகி எஸ்ஜி சூர்யா நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். சமூக வலைதளஙக்ளில் இந்த கைது பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், இன்று இரவு கைது செய்யப்பட இருப்பதாக அவர் வெளியிட்டுள்ள தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.