முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் மறைவுக்கு சசிகலா ஆறுதல் கூறினார். ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்த சசிகலா ஆறுதல் கூறியபோது ஓபிஎஸ்சும் கண்கலங்கினார். கண்கலங்கிய பன்னீர் செல்வத்தின் கரங்களை பற்றி  ஆறுதல் கூறிய சசிகலாவும் கண்கலங்கினார். மறைந்த மனைவியின் உடல்நிலை பாதிப்பு குறித்த விவரங்களை சசிகலாவிடம் ஓபிஎஸ் தெரிவித்தார். அப்போது, ஓபிஎஸ்ன் மகன் ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் அமைச்சர் உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா சந்தித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக இருவரும் அதிகாரபூர்வமாகச் சந்திக்காத நிலையில், ஓபிஎஸ் மனைவியின் மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்க அவரை சசிகலா சந்தித்தார். முன்னதாக, மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு நேரில் சென்று சசிகலா அஞ்சலி செலுத்தினார். அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கட்சிக்கும், அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறி வருகின்றனர். ஆனால், சசிகலாவோ அதிமுகவினர் துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்று ஆறுதல் கூறிவருகிறார். அதிமுகவை கைப்பற்றுவேன் எனக் கூறிய சசிகலா, அதற்காகத்தான் இவ்வாறு செய்கிறார் என்ற எண்ணம் தோன்றினாலும், ஒருவர் துக்க நிலையில் இருக்கும்போது அவர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுவது மனிதாபிமானம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


 






முன்னதாக, மாரடைப்பால் மரணமடைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்றார். மனைவியை பிரிந்த சோகத்துடன் அழுதுகொண்டிருந்த ஓபிஎஸ்க்கு, முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அண்ணன் பன்னீர்செல்வத்தின் மனைவியார் மரணச் செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் முதல்வர் கூறினார். அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரணியன், தங்கம் தென்னரசு, சேகர் பாபு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக, சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்துக்கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் மனைவி மறைவால் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.


அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் இன்று காலமானார். கடந்த 10 நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.45 மணிக்கு அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 66. ஓபிஎஸ் மனைவியின் மரணத்தால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.  பிற கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த சென்றுக்கொண்டிருக்கின்றனர். இன்று மதியம் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.


விஜயலட்சுமி, ஓபிஎஸ் மூன்று முறை முதலமைச்சராக இருந்தபோதும், துணை முதலமைச்சராக இருந்தபோதும் அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஓபிஎஸ் பல்வேறு கட்ட பிரச்னைகளை சந்தித்தபோதும் அவருக்கு பக்கபலமாக இருந்தார். கடந்த மே மாதம் ஓபிஎஸ்-ன் சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில், மனைவியை இழந்து மருத்துவமனையில் கண்ணீருடன் இருக்கும் ஓபிஎஸ்-க்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.