தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வளர்ச்சிக்கு அடிப்படை தூண்களில் ஒருவர் மாடர்ன் தியேட்டர் சுந்தரம். இவரது மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவனமே ஆரம்ப கால தமிழ் சினிமாவில் பல புதிய படைப்புகளையும், முயற்சிகளையும் உருவாக்கி தொடக்கப்புள்ளியாக இருந்தது. சேலத்தில் இன்றளவும் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு நிறுவன நுழைவுச் சுவர் உள்ளது.


மாடர்ன் தியேட்டர்ஸ் நிலம்:


இந்த நிலையில், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் கருணாநிதியின் சிலை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி,  அதிகாரிகள் அத்துமீறி இடத்தில் கல் நட்டுவிட்டுச் சென்றிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக அழுத்தம் தருவதாகவும் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் இடத்தின் உரிமையாளர் குற்றம் சாட்டினார்.


இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டுக்கு அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சேலத்தில் முன்பு செயல்பட்டு வந்த மாடர்ன் தியேட்டர்ஸின் நுழைவாயிலில் சிலை அமைப்பதற்காக, அந்த இடத்தை கேட்டு, அரசின் சார்பில் நிர்ப்பந்திக்கப்படுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன.


பாதிப்பில்லாமல் எல்லை கற்கள்:


இந்த நிறுவனம் செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது. மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியின் நுழைவாயில் வளைவு சேலம் ஏற்காடு நெடுஞ்சாலையில் கன்னங்குறிச்சி கிராமத்தின் சர்வே எண்.8இல் உள்ளது.


இந்த சாலையை விரிவாக்கம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதால், நெடுஞ்சாலைத்துறை நிலங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வதற்காக, வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களால், 2.12.2023 அன்று, அளவீடு நடத்தப்பட்டுள்ளது. இந்த அளவீட்டின் போது. மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு முழுமையாக, நெடுஞ்சாலைத்துறை நிலத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. அரசின் நிலவரை படத்தில் உள்ளவாறு. எல்லைகளை வரையறுப்பதற்காக, நெடுஞ்சாலையினுடைய எல்லையில் எந்த சொத்துக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன.


கட்டுமான பணி திட்டமில்லை:


மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பழமையான இந்த நுழைவாயில்வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்ற அடிப்படையில், இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ. சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. எனவே, இந்த நெடுஞ்சாலைத்துறை இடம் தவிர. வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில் நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை தெளிவுபடுத்தப்படுகிறது.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.