Rs 6000 Flood Relief: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 17) ரேசன் கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


மிக்ஜாம் புயல் பாதிப்பு:


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கிய நிலையில், மறுநாள் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்தது. ஆனால், வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மூலக்கொத்தளம், மணலி, மிண்ட், அம்பத்தூர், ஆவடி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் என பல பகுதிகளில் தண்ணீர் ஒரு வாரத்திற்கு பிறகே வடிந்தது. பல இடங்களில் 5 நாட்களுக்கு பிறகே மின்சார இணைப்பு கிடைத்தது.


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது  இதையடுத்து, வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த 6 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


டோக்கன் விநியோகம்


குடும்பங்களுக்கு 6 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டாலும், மாடு, ஆடு, பயிர்கள் பாதிப்பிற்கு தனித்தனியாக இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களின் வலை, படகுகள், வல்லங்கள் பாதிப்பிற்கும் தனித்தனியாக இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த இழப்பீட்டுத் தொகையும் விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகரம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே தெரிவித்திருந்தார். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதற்கேற்ப நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமின்றி குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும்  வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.


ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும்


வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், வெள்ள நிவாரணம் ரூ.6,000-க்கான டோக்கன் விநியோகிக்க ஏதுவாக டிசம்பர் 17 (ஞாயிற்று கிழமை) ரேசன் கடைகள் இயங்கும்  என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமை ரேசன் கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், வெள்ளத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதியில் நாளை மறுநாள் முதல் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கும் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் ரூ.6,000 வழங்கும் பணியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 




மேலும் படிக்க


மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன இடத்தை கேட்டு நிர்பந்திக்கிறோமா? அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்