ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்தவர் பாண்டியன் என்ற தமிழரசன். இவருக்கு வயது 24. ஓட்டுநரான இவர், சென்னையில் தங்கி கார் ஓட்டும் பணி செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரை சென்னை மண்ணடி லிங்குசெட்டி தெருவில் சாலையோரம் நிறுத்தி இருந்தார்.


பின்னர் நேற்று அதிகாலையில் காரை அங்கிருந்து எடுத்தார். அப்போது காருக்கு அடியில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுத்து இருந்துள்ளார். பாண்டியன் இதனை கவனிக்காமல் காரை அங்கிருந்து எடுத்து சென்றுவிட்டார். இதில் காருக்கு அடியில் படுத்து இருந்த பெண், காரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிந்துவந்த வடக்கு கடற்கரை போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த பெண்ணும், ஒரு ஆணும் ஒன்றாக நடைபாதையில் படுத்து தூங்கியது தெரிய வந்தது. அதன் பிறகு அந்த பெண் தூக்க கலக்கத்தில் அருகில் பாண்டியன் நிறுத்தி இருந்த காருக்கு அடியில் உருண்டு சென்று படுத்து தூங்கியுள்ளார். பாண்டியன் இதை கவனிக்காமல் காரை எடுத்தபோது, காருக்குள் அடியில் படுத்து இருந்த பெண், கார் சக்கரத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.


இதனையடுத்து இந்த வழக்கு பூக்கடை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் காவல் ஆய்வாளர்  இந்திரா தலைமையில் போலீசார் பலியான அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? உள்ளிட்டவை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் நள்ளிரவில் அந்த பெண்ணுடன் படுத்து உறங்கியவரும்   மாயமாகி விட்டார். எனவே  அந்த நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கார் ஓட்டுநர் பாண்டியனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.