புதுச்சேரியில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப PRTC நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டம்

புதுச்சேரி அரசின் சாலை போக்குவரத்துக் கழகம் (PRTC) சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு மொத்தமாக 617 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 354 பேர் நிரந்த ஊழியர்களாகவும், 263 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணிபுரிகின்றனர். இதனிடையே கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் அரசு இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்றும் 13வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

இதனைத் தொடர்ந்து, ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், அனைத்து ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு சம்பளத்தை வழங்க கோரியும் சாலைப் போக்குவரத்து கழக ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப் பட்டிருந்தது.  இதற்காக சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்த நோட்டீஸ் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 28-ம் தேதி முதல்‌ 600 க்கும் மேற்பட்ட PRTC ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ரங்கசாமி, போக்குவரத்து துறை செயலாளர் முத்தம்மா, போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் ஆகியோர் ஊழியர்களுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனால் இன்றும் 13வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

Continues below advertisement

அனைவருக்கும் இறுதி எச்சரிக்கை

இந்த நிலையில், போக்குவரத்து துறை மேலான் இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் சாத்தியம் இல்லாததால், அவர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு ஊதிய உயர்வாக 8000 ரூபாய் உயர்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பொது மக்கள் பாதிக்கும் வகையில் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்வது சட்டத்திற்கு புறம்பானது. எனவே இதன்மூலம் அவர்கள் அனைவருக்கும் இறுதி எச்சரிக்கை விடப்படுவதாகாவும், அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்ப PRTC நிர்வாகம் உத்தரவிடுகிறது. உடனடியாக பணிக்கு திரும்பவில்லை என்றால் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.