சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தற்போது முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளைப் போன்று கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு உள்ளிட்ட மாணவர்களுக்கு ரூ 4 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இரண்டாமாண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் காலவரையற்ற தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவக் கல்லூரி இளநிலை மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்த போதும் மாணவர்கள் சொந்த ஊருக்குச் செல்லாமல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 



 

இந்த நிலையில் முதலாமாண்டு மற்றும் பயிற்சி மருத்துவர்களை தவிர பிறருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் கடந்த 25 ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விடுமுறை என கல்லூரியின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று 7வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டப் பந்தலில் தரையில் அமர்ந்து தங்களது கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு புத்தகத்தைப் படிக்கும் நூதன போராட்டம் நடத்தினர். அப்போது கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.

 



 

மேலும் இந்த மருத்துவக் கல்லூரியில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அரசுடமையாக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை மாணவர்கள் படும் இன்னல்களை ஊமை நாடகமாக நடித்துக் காட்டினர். கருப்பு உடை அணிந்து முகத்தில் ஓவியம் வரைந்து ஊமை நாடகம் நடத்தியது சக மாணவர்களிடையே வரவேற்பை பெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ மாணவர்கள், கடலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அரசாணைப்படி அரசு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்ட போதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், வித விதமான போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில் தற்போது கண்ணை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தியும், கடந்த 7 ஆண்டுகளில் தாங்கள் பட்ட இன்னல்களை ஊமை நாடகமாகவும் நடத்தி காட்டியயதாகவும் கூறிய மாணவர்கள், அரசாணை எண் 45 ன்படி கல்விக் கட்டணத்தை 4 லட்சத்தில் இருந்து குறைத்து 13 ஆயிரத்து 600 ரூபாயாக வசூலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டததில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.