தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில், புதிய மாவட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்துள்ளார்.


புதிதாக 8 மாவட்டங்கள்:


தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இந்த பதிலை அளித்துள்ளார்.


புதிதாக 8 மாவட்டங்களை உருவாக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.


ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பதில் அளிக்கையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


சமீபத்தில், கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.


கடந்த 1966ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களாக இருந்த எண்ணிக்கை, தற்போது, 38 மாவட்டங்களாக அதிகரித்துள்ளது. 
இந்தியா விடுதலை பெற்ற பின், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் சென்னை மாகாணம் என்பது சென்னை மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.


மாநில எல்லைகள் சீரமைப்புகளின் வாயிலாக, தொடர்ந்து, 1953 முதல், 1956ம் ஆண்டு வரை, தற்போதைய எல்லைகள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநிலம் என்பது, 1969ஆம் ஆண்டில், அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து, நிர்வாக சீர்திருத்தத்திற்காகவும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.


மாவட்டங்கள் உருவான வரலாறு:


1966ஆம் ஆண்டு: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, தர்மபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1974ஆம் ஆண்டு: திருச்சி மாவட்டத்தைப் பிரித்து, புதுக்கோட்டை மாவட்டம்.
1979ஆம் ஆண்டு: கோவை மாவட்டத்தைப் பிரித்து ஈரோடு மாவட்டம்.
1985ஆம் ஆண்டு: மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைப் பிரித்து, சிவகங்கை, விருதுநகர்.
1985ஆம் ஆண்டு: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, திண்டுக்கல் மாவட்டம்.
1986ஆம் ஆண்டு: திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து துாத்துக்குடி மாவட்டம்.
1989ஆம் ஆண்டு: வடஆற்காடு மாவட்டத்தைப் பிரித்து, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்கள்.
1991ஆம் ஆண்டு: தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள்.
1993ஆம் ஆண்டு: தென் ஆற்காடு மாவட்டத்தை பிரித்து, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள்.
1995ஆம் ஆண்டு: திருச்சியை பிரித்து கரூர், பெரம்பலுார் மாவட்டங்கள்.
1996ஆம் ஆண்டு: மதுரை மாவட்டத்தைப் பிரித்து, தேனி மாவட்டம்.
1997ஆம் ஆண்டு: சேலம் மாவட்டத்தைப் பிரித்து, நாமக்கல் மாவட்டம்.
1997ஆம் ஆண்டு: செங்கல்பட்டு மாவட்டத்தை பிரித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்.
2004ஆம் ஆண்டு: தர்மபுரி மாவட்டத்தை பிரித்து, கிருஷ்ணகிரி மாவட்டம்.
2007ஆம் ஆண்டு: பெரம்பலுார் மாவட்டத்தைப் பிரித்து, அரியலூர் மாவட்டம்.
2009ஆம் ஆண்டு: கோவை, ஈரோடு மாவட்டங்களை பிரித்து, திருப்பூர் மாவட்டம்.
2019ஆம் ஆண்டு: விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம்.
கடைசியாக, தமிழ்நாட்டின் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உருவாக்கப்பட்டது.