President Chennai Visit: நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். சென்னை வந்த அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார். 


பட்டமளிப்பு விழா: 


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இதன் 8வது பட்டமளிப்பு விழா நாளை (அக்டோபர் 27) மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அவர் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்க உள்ளார். 


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால், இணை அமைச்சர்கள் ஸ்ரீபாத் நாயக், சாந்தனு தாகூர் ஆகியோரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக திரௌபதி முர்மு இன்று மாலை 6 மணி அளவில் பெங்களூருவில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டார். சுமார் இரவு 7 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 


சென்னை வந்தார் குடியரசுத் தலைவர் முர்மு:


சென்னை வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர். இவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், பொன்முடி, எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் இருந்தனர். மேலும், டிஜிபி சங்கர் ஜிவால், மேயர் பிரியா உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து காரில் சாலை மார்க்கமாக கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்று இரவு அங்கு தங்குகிறார். தொடர்ந்து நாளை காலை 9 மணி முதல் 9.30 மணி வரை ஆளுநர் மாளிகையில் முக்கிய நபர்களை சந்திக்கிறார். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு ஓஎம்ஆர் சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் சென்று 8வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். 


இந்நிகழ்ச்சி காலை 10.15 மணி முதல் 11.15 மணி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்து விமான நிலையத்துக்கு 12 மணியளவில் புறப்படும் திரௌபதி முர்முவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழியனுப்பும் நிகழ்வு நடைபெற உள்ளது. பின்னர் இந்திய விமானப்படை தனி விமானத்தில் புறப்பட்டு அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு மரண தண்டனை - அதிர்ந்து போன மத்திய அரசு


TN Cabinet Meeting: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31-ல் கூடுகிறது அமைச்சரவை கூட்டம்...ஆலோசிக்கப்படும் விஷயங்கள் என்ன?