சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


மாவட்ட நீதிபதி அந்தஸ்தில்  உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக  நியமிக்க கடந்த மார்ச் மாதம்  கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நான்கு பேரையும் சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.


சில மாதங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் 5 நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மாவட்ட நீதிபதிகள் 4 பேரின் பெயர்களை பரிந்துரை செய்தது.


தமிழ்நாட்டில் மாவட்ட நீதிபதிகளாக இருப்பவர்கள் ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன், கே.ராஜசேகர். இவர்கள், 4 பேரையும் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் கவர்னர் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து இந்த 4 மாவட்ட நீதிபதிகளையும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்ய உச்ச நீதிமன்ற  மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் பரிசீலனை செய்தது.


பின்னர், 4 மாவட்ட நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு தகுதியானவர்கள். அவர்கள் இதுவரை வழங்கிய தீர்ப்புகளை ஆய்வு செய்ததில், மிகவும் திறமையானவர்கள் என்று தெரிய வந்தது. எனவே, 4 பேரையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.


இந்த பரிந்துரை ஏற்று கொண்ட மத்திய அரசு உயர்நீதிமன்றம் நீதிபதிகளாக நியமிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியது. நான்கு பேரும்  தேவனகரி கையொத்து போட்டுள்ளானர். இன்று மாவட்ட நீதிபதி அந்தஸ்தில்  உள்ள ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.