பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். 


பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நெற்பயிர் காப்பீடு செய்ய இன்று (15.11.2023) கடைசி நாளாகும். எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளால் வரும் பயிர் மகசூல் இழப்பிலிருந்து காத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காத்திட ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 


கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக பதிவு செய்ய இயலும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்ய இன்று கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயிர் காப்பீடு செய்ய இயலவில்லை.


கடந்த குறுவை பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்யப்படாத நிலையில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் காப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஆனால், பல்வேறு காரணங்களால் இம்முறை பயிர் காப்பீடு செய்யப்படும் இணையதளம் சர்வர் பிரச்சினை ஏற்பட்டு காப்பீடு செய்ய இயலாத நிலை உருவானது. விவசாயிகளும் நவம்பர் முதல் வாரம் வரை பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 


தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவசாயிகள் பயிர் காப்பீடு ப்ரிமீயம் தொகை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதற்கு அரசு எவ்வித தீர்வு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிசாமி X தளத்தில் (Formerly Known as Twitter) வெளியிட்டுள்ள பதிவில், “ இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யும் கோரிக்கையினை எழுப்பியும், திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுங்கோபத்தில் உள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை


பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு குறித்து அவரின் பதிவில்,”  இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றேகடைசிநாள் என்ற நிலையில் இணைய வழி சேவை எப்பொழுது சீராகும் என்பது தெரியாத நிலையில், விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, உடனடியாக விடியா அரசின் முதலமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்துகிறேன்.” என்று தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.