மதுரையைச் சேர்ந்த அசன் பாட்ஷா, அபிபுல்லா ஆகிய இருவரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  அதில்,  "மதுரை கோரிப்பாளையம் பகுதியிலுள்ள தர்கா முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் பிரச்சனை தொடர்பாக வழங்கிய தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற ரஹ்மத்துல்லா என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மத்திய அரசை மிரட்டும் விதமாக பேசினார்.

 

இது தொடர்பாக தல்லாகுளம் காவல் ஆய்வாளர் செய்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிறுபான்மையினர், பல இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்த அடிப்படையிலேயே கோரிப்பாளையத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வை ஏற்பாடு செய்தது மட்டுமே நாங்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு விசாரணைக்கும்,  நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறோம். ஆகவே, இவற்றைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில்,  "நாங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததைத் தவிர, மத்திய அரசுக்கு எதிராக எதுவும் பேசவில்லை" என வாதிடப்பட்டது.  அரசுத் தரப்பில், "ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறப்படவில்லை. ஜாமீன் வழங்கக்கூடாது" என வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கை மார்ச் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

 



 

டாக்டர் ஸ்ரீதர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற  ஷேக் ஜின்னா மதாருக்கு பரோல்  தரக்கோரிய வழக்கு - சிறைத்துறை பொது ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவு

 

 

திருநெல்வேலியைச் சேர்ந்த சையத் அலி பாத்திமா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியில் நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். 2011ஆம் ஆண்டு  எனக்கும் எனது கணவர் ஷேக் ஜின்னா மதார் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். 1999ஆம் திருச்சியை சேர்ந்த டாக்டர் ஸ்ரீதர் என்பவரை கொலை செய்ததாக பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.  பாளையங்கோட்டை சிறையில் 22ஆண்டுகளாக உள்ளார். இந்த 22 ஆண்டுகளில் மொத்தமாகவே 16 நாட்கள் மட்டுமே பரோலில் வெளியே வந்துள்ளார். 22 ஆண்டுகால சிறை வாழ்க்கையில் என் கணவர் மீது எந்தவித எதிர்மறை குற்றங்களும் இல்லாத நிலையிலும் இவருக்கு பரோல் விடுப்பு கிடைக்காத சூழ்நிலையே உள்ளது.

 

தற்பொழுது எனது கணவரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எனது இரண்டு குழந்தைகளையும் சிறந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதாலும் எனது கணவரின் அம்மாவின் ஒப்புதலுடன் அவர்களின் சொத்துக்களை எனது கணவரின் பெயரில் மாற்றுவதற்காகவும்,30 நாட்கள் பரோலில் எனது கணவரை அனுப்ப  உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார். இந்த வழக்கு  நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், குற்றவாளியை பரோல் வழங்கும் பட்சத்தில் அவரது பகுதி காவல் துறையினர் பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனவே, 2 வாரத்தில் பரோல் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், 2 வாரங்களில் பரோல் குறித்து தமிழக சிறைத் துறை பொது ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.