Pongal Parisu Thogai 2024: நாளை முதல் நியாய விலை கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்படும் என கூட்டுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாள், நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கம் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும். 


தைத்திருநாளான பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஆண்டுதோறும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். பொங்கல் பரிசுடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. 


கடந்த மாதம் மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக ரூ.6000 நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாடு அரசு தரப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் இந்த ரொக்கப்பணம் யாருக்கெல்லாம் என்பதையும் அரசு அறிவித்துள்ளது.


மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், வரி செலுத்துபவர்கள், பொது துறையில் பணியாற்றுவோர், மத்திய மாநில அரசு ஊழியார்களாக இருந்தால் அவர்களுக்கு ரொக்கப்பணம் வழங்கப்படாது. கடும் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   


மேலும் நாளை முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகான டோக்கன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் நாளை முதல் அந்தந்த நியாய விலைக் கடைகளில்  டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். அந்த டோக்கனில் பொங்கல் பரிசு வழங்கப்படும் நேரம் மற்றும் நாள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதற்கு ஏற்றவாறு மக்கள் அந்த நேரத்தில் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ளலாம். பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் ரூ.1000 ரொக்கமும் வழங்கப்படும்.  மேலும், வரும் 10 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகையை  மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னரே மக்களுக்கு இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் வரும் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படும்.