தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில், நாள்தோறும் அணிவகுப்பு காலை நேரத்தில் நடத்தப்படும். இதில் பல்வேறு மாவட்டங்களில் காவல் துறையினர் செய்யும் தவறுகளை மட்டும் சுட்டிக் காண்பித்து அதனை திருத்திக்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவது வழக்கம். அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் காவல்துறையினர் தினமும் ஒரு திருக்குறள் வாசிக்க வேண்டும் அந்த திருக்குறளுக்கான விளக்கமும் அளிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு சிறப்பான செயல்களில் ஈடுபட்டு வருவது அனைவரின் பார்வையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது..

 

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கையால் அனைத்து காவல் நிலையங்களில் தினசரி ஆஜர் அணிவகுப்பில் திருக்குறள் வாசிக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சீனிவாசன் கடந்த 7-ஆம் தேதி பொறுப்பு ஏற்றார். அவர் பொறுப்பு ஏற்ற 10 நாட்களில் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் தினசரி காலை ரோல்கால் என்றும் போலீசார் ஆஜர் அணிவகுப்பில் திருக்குறள் வாசிக்கப்பட்டு, அதற்கான விளக்கம் அளிக்கப்படுகிறது. 



மேலும் மகாத்மா காந்தி பொன் மொழிகளுக்கு ஏற்ப போலீசார் மக்களின் சேவகர், எஜமானர்கள் அல்ல என்ற வரிகள் படிக்கப்படுகிறது. மேலும் போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அவர்களது பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றிக்கு விடுமுறை, வாழ்த்தும் மடல் மட்டுமின்றி வாக்கி டாக்கி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்து, உடல் நலத்திலும், குடும்ப நலத்திலும் அக்கரை செலுத்த அறிவுரை வழங்கி போலீசாரை உற்சாகப்படுத்தி வருகிறார். காவல்துறையினர் அனைவரும் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைகவசமும், வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் அவசியம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். மேலும் சட்ட விரோத செயல்களான லாட்டரி, கஞ்சா விற்பனை, மணல் கடத்தல், சாராயம் விற்பனை ஆகியவற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைத்து உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்களிடம் எனது எல்லையில் சட்ட விரோத செயல்கள் இல்லை என சான்று பெற்றுள்ளார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை களையெடுக்க தனிப்படை அமைத்து தனது நேரடி பார்வையில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறார்.

 

இதனுடன் கொரோனா ஊடங்களில் மாவட்ட முழுவதும் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குவதுடன், ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று உணவு, பழங்கள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகிறார். பணியின்போது மக்களுக்கு உயிர் காக்க உதவிடும் காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார். காவல்துறையினரின் மன அழுத்தத்தை போக்கி உற்சாகத்துடன் பணியினை மேற்கொள்ளவும், மக்களிடம் மனிதநேயத்துடன் நடந்து கொள்ளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.