கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமாக நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இரவு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. ஆயுதங்களுடன் ஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர். 2017 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட சயனுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தால் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக செய்தியாளர்கள் பேட்டியில் கூறினார். அதன் பின்னர், 2019 ஆம் ஆண்டில் அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த வழக்கு தொடர்பாக சதீசன் , உதயகுமார் , சம்சிர் அலி, தீபு ,சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


இந்த சூழ்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயானை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி காவல் துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயன் ஆஜரானர். அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சயன் அளிக்கும் வாக்குமூலம் முக்கியத் திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழக்கில் காவல் துறையினர் மீண்டும் விசாரணையை துவக்கி இருப்பதால், முக்கிய பிரமுகர்களும் இவ்வழக்கில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.