ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்துள்ளார்.


தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அக்டோபர் ஒன்றாம் தேதியே ஒப்புதல் அளித்துவிட்டதாக முன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


அன்புமணி ராமதாஸ் ட்வீட்


இந்நிலையில், ஆளுநர் ஒப்புதல் தெரிவித்ததை வரவேற்று முன்னதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.


” தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்க்கான அவசர சட்டத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவது தடுக்கப்படும்.


ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதற்கு பிந்தைய 14 மாதங்களில் 29 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அவை இனி தடுக்கப்படும். அந்த வகையில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் வரவேற்கத்தக்கது.


இம்மாத இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத்தை நிறைவேற்றவும், அதை நீதிமன்றங்களில் பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


 






சந்துரு குழு:


ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டை தடை செய்வது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு, கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி தனது பரிந்துரைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து அந்த அறிக்கையில் உள்ள விஷயங்கள் குறித்தும், ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றியும் அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டத்தில் துறை வாரியாக விரிவாக விவாதிக்கப்பட்டது. 


71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும், மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன என்றும், விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நீதிமன்றம் தலையீடு:


கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணம் இழப்பு அபாயம் இருப்பதாகக் கூறி தடை செய்யப்பட்ட நிலையில், அது உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.


ஆனால், இந்த முறை இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல் நலம் மற்றும் மன நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது,  மக்களின் நல்வாழ்விற்காக இந்த ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யும் உரிமையும் அதிகாரமும் மாநில அரசுக்கு இருப்பதாகவும், அதன் அடிப்படையில் தடை செய்தால், நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.





 


அதேபோல், ஆன்லைன் விளையாட்டுகளால் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள நீதியரசர் சந்துரு, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் பிரதான நோக்கம் லாபமாக இருக்கிறதே தவிர, விளையாடுபவர்களின் திறன்களை மேம்படுத்துவதாக இல்லை. அதனால், இதுபோன்ற விளையாட்டுகள், விளையாட்டுகளின் பட்டியலில் சேர்ப்பதற்கு கூட தகுதியற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்:



  • இதையடுத்து செப்டம்பர் 26ஆம் தேதி, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசரச் சட்ட மசோதாவிற்கு, தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

  • இந்நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக, இன்று (அக்டோபர் 7ஆம் தேதி) தகவல் வெளியாகியுள்ளது. 

  • இதையடுத்து, ஆன்லைன் விளையாட்டை தடை செய்வது தொடர்பான மசோதா, அரசிதழில் வெளியானது. தொடர்ந்து, சட்டமாக நடைமுறைக்கு வந்தது. 


இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கான நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, வரும் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள, தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் நிரந்தர சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.