'பின்தங்கிய மாவட்டம், வறட்சியான ஊர், கருவேல் மரங்கள் மண்டிய கிராம், தண்ணியே கிடைக்காது" என்று சிவகங்கை மாவட்டம் சித்தரிக்கப்பட்டாலும் சிவகங்கை மாவட்டம் தற்போதும் பல்வேறு கலாச்சாரங்களை தாங்கி நிற்கும் பழமையான ஊராகவே இருந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அடுத்த படியாக அதிகளவு குளம், கண்மாய், ஏரி என பல்வேறு நீர் நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் உள்ள தெப்பம் தான் சிவகங்கை மாவட்டத்தையே நிர்மாணிக்கிறது. பல்வேறு வரலாறு கொண்ட சிவகங்கையில் உள்ள கிராமம் ஒன்று பிரதமரால் பாராட்டு பெற்றுள்ளது.



 

 

சிவகங்கை நகர் பகுதியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது காஞ்சிரங்கால் கிராமம். சுமார் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை கொண்ட  காஞ்சிரங்கால் கிராமம் கழிவு மற்றும் குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றியும் கண்டுள்ளது. வளமாக்கப்படும் கழிவுகள் என்ற தலைப்பில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் தேசிய ரூர்பன் திட்டத்தின் கீழ் சுமார் 65 லட்சத்தில் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் உயிர் எரிவாயு ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக காஞ்சிரங்கால் கிராமம், சிவகங்கை நகர்புறங்களில் சேகரிக்கப்படும் கோழி இறைச்சி, மீன் இறைச்சி, காய்கறிக் கழிவுகள் ஆகியவற்றை சேகரித்து, கழிவுகளில் இருந்து வெளியேறும் மாசு கட்டுப்பாட்டை குறைத்து, மின்சார உற்பத்தியை துவக்கி உள்ளனர்.



சிவகங்கை ஊரக வளர்ச்சி துறையினர். மேலும்,இந்த ஆலையின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்தல், கரிம மேலாண்மையை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளது. உணவு கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம் காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளுக்கு வழங்கப்படுகிறது. இதனால் ஊராட்சியின் மின்  செலவினம் மிகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலம் நாளொன்றுக்கு 2 டன் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்ற நிலையில், சேகரிக்கப்படும் கழிவுகள் நீருடன் கலந்து தொட்டியில் ஊற்றி அரைக்கப்பட்டு வெளியேறும் வாயுவின் மூலம் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.





மின்சாரம் தயாரிப்பிற்கு பின்  மிஞ்சும் நீர் விவசாயத்திற்கு இயற்கை உரமாகவும் பயன்படுவதால், விவசாயிகள் ஆர்வமுடன் வந்து நீரை பெற்றுச் செல்கின்றனர். இதன் உற்பத்தி திறன் அதிகரிக்கப்படும் தருணத்தில் சிவகங்கை மாவட்டம் மின்சாரத்தில் ஓரளவு தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாறும் என  ஊரக வளர்ச்சித் துறையினர் தெரிவிக்கின்றனர்.  

பிரதமர் பாரட்டு பெற்ற  இந்த திட்டம் மேலும் பன்மடங்கு மேம்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.