Periyar University: பெரியார் பல்கலைக்கழக  பதிவாளர் கோபி மீது பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். 


தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்று பெரியார் பல்கலைக்கழகம். சேலம் மாவட்டத்தினை மையமாகக் கொண்டு இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணிபுரிபவர் கோபி. இவர் வேதியியல் துறையின் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். 


இவர் மீது பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை ஆய்வு மாணவியாக இருந்து வந்த ஒரு மாணவியை விடுமுறை தினங்களில் பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்து  பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுக்கப்பட்டிருந்தது.  பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த சேலம் மாநகர கருப்பூர் காவல் நிலைய காவலர்கள் பதிவாளர் கோபியை கைது செய்துள்ளனர். 


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோபி. இவருக்கு  கடந்த மே மாதம் 13 ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் வேதியியல் துறையில் ஆய்வு மாணவி ஒருவரை கோபி விடுமுறை நாளான நேற்று இரவு 7 மணிக்கு ப்ராஜெக்ட் நோட் கையெழுத்து பெற அழைத்துள்ளார். அதன்படி பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் வீட்டிற்கு சென்ற ஆய்வு மாணவிக்கு கோபி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 


உடனடியாக வீட்டிற்கு தப்பி சென்ற மாணவி வீட்டில் இருந்த உறவினர்களிடம் நடந்ததை கூறியுள்ளார். அதன்பின் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பதிவாளர் வீட்டிற்குச் சென்ற மாணவியின் உறவினர்கள் பதிவாளர் மற்றும் வேதியியல் துறை பேராசிரியராக உள்ள கோபி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த பதிவாளர் (பொறுப்பு) கோபி சேலம் குரங்கு சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இதைத் தொடர்ந்து  பாலியல் தொல்லைக்கு ஆளான ஆய்வு மாணவி, கருப்பூர் காவல் நிலையத்தில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி மீது இன்று மதியம் புகார் அளித்தார். அதேபோல அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபியும், கருப்பூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனிடையை ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்களை சீண்டுதல் (354 A) மற்றும் தொடர்ந்து தொல்லை தருதல் (354 D) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் பதிவாளர் கோபி மீது வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்யப்பட்டார். பின்னர் பதிவாளர் கோபி கருப்பூர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன் விசாரணை செய்தார். விசாரணையில் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கோபி விடுமுறை நாளில் மாணவியை வீட்டிற்கு தனியாக அழைத்தது உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பதிவாளர் கோபி சேலம் அரசு  மருத்துவமனைக்கு கொரோனா பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதே கல்வி ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் புகார் அளிக்கப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.