உலக சிக்கன தினம்:


தற்போதைய காலக்கட்டத்தில் மாத ஊதியம் பெறுபவர், தினக் கூலி, வியாபாரம் செய்பவர் என யாராக இருந்தாலும் வரவுக்கு ஏற்ப தேவைகள் பெருகிவிடுகின்றன.  மாத தவணை, வீட்டு வசதி பொருட்கள் வாங்குவது என மாதம் ஏதாவது ஒரு வகையில் செலவு வந்துக் கொண்டே தான் இருக்கும்.  என்ன இருந்தாலும் வருவாயில் இருந்து  சிறிய தொகையை சேமிக்கவில்லை எனில் எதிர்காலத்தில் பாதிப்பு தான்.  இப்படி  சிக்கனத்தின் அவசியம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடையே வலியுறுத்தும் விதமாக தான்,  உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது. உலக சிக்கன தினம் ஒவ்வொரு வருடம் அக்டேபார் 30ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


 உலக சிக்கன தினத்தை ஸ்பெய்ன் நாட்டினர் கடந்த 1921ஆம் அண்டு முதன்முதலாக கொண்டாடினர். இத்தாலியின் மிலன் நகரில் சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு கடந்த 1924ஆம் ஆண்டு நடைபெற்றது. உலகின் பல சேமிப்பு வங்கிகளின் பிரநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டிற்கு பிறகு, மக்கள் அனைவரும் சிக்கனத்தை அறிய வேண்டும் என்பதற்காக, உலக சிக்கன தினம் என ஒரு தினம் அறிமுகப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 


“இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு”


இந்நிலையில், உலக சிக்கன தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "சிக்கனத்தின் இன்றியமையாமையை அனைவருக்கும் உணர்த்திடும் நாளாக அக்டோபர் திங்கள் 30ஆம் நாள், ஆண்டுதோறும் “உலக சிக்கன நாள்” எனக் கொண்டாடப்படுவதைக் குறித்து பெருமகிழ்ச்சி அடைவதுடன் என்மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பமும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சேமித்தால், அதன் வாயிலாகக் குடும்பத்தின் தேவைகளை நிறைவு செய்துகொள்வதுடன், அவ்வப்போது ஏற்படும் எதிர்பாரச் செலவினங்களையும் சமாளித்திட இயலும். “ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை” என்ற குறளில் வள்ளுவர் பெருந்தகை, பொருள் வரும் வழி சிறிதாக இருந்தாலும், பொருள் செலவாகும் வழி பெரிதாக இல்லையெனில், அதனால் தீங்கு இல்லை என்று சிக்கனமாக வாழ்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார்.


முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்:


சேமிப்பின் அவசியத்தை பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே எடுத்துரைத்து, சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். “இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என்பதனைக் கருத்தில் கொண்டு, மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைக்காக சேமிக்க வேண்டும்.சேமிப்பே ஒருவரின் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதைச் சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம். எனவே, உலக சிக்கன நாள் கொண்டாடப்படும் இவ்வேளையில், மக்கள் தங்கள் சேமிப்புகளை அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து அதன்மூலம் தங்கள் வாழ்வில் வளம் சேர்ப்பதுடன், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் துணை புரிந்திட வேண்டுகிறேன். சேமிப்போம்! சிறப்பாக வாழ்வோம்" என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.