அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன் – பெள்ளி – குட்டி யானைகளின் உறவை மிக அழகாக காட்டியிருந்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பொம்மன் – பெள்ளி தம்பதியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், தம்பதிகள் இருவரையும் பாராட்டி தலா ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.


91 பணியாளர்கள்:


மேலும், தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு தலைமை செயல் அலுவலகத்தில் முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் எடுக்கப்பட்ட ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் இடம்பெற்ற ரகு எனும் யானைக்குட்டியின் பராமரிப்பாளர்களான பொம்மன், பெள்ளி தம்பதியர்கள் சந்தித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்து, பாராட்டு பத்திரமும், பொன்னாடையும் அணிவித்து தலா ரூபாய் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.


இந்த ஆவணப்படத்தின் மூலம் தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடு மற்றும் யானைகள் பராமரிப்பு முறை உலகளவில் கவனம் பெற்றது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டு யானைகள் முகாம்களான முதுமலையில் உள்ள தெப்பக்காட மற்றும் ஆனைமலையில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் மொத்தம் 91 பணியாளர்களம் பணிபுரிந்து வருகின்றனர்.


9.10 கோடி நிதி:


இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 1 லட்சம் ரூபாய் வீதம் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். யானை பராமரிப்பாளர்களாகிய இவர்கள் வசிக்கத் தேவையான சுற்றச்சூழலுக்கு இசைந்த, அவர்கள் பயன்பாட்டிற்கு உகந்த வீடுகள் கட்ட ரூபாய் 9.10 கோடி நிதி உதவியை அரசு வழங்கும் எனவும் அறிவித்துள்ளார். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமை ரூபாய் 5 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு அறிவித்துள்ளது.


கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியில் யானைகள் பராமரிக்க தேவையான தங்கும் இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுடன் ஒரு புதிய யானைகள் முகாம் ரூபாய் 8 கோடி செலவில் அமைக்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சரின் 2022ம் ஆண்டு உதகை பயணத்தின்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் அதிநவீன யானைகள் பாதுகாப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் வளாகம் ஒன்று ஏற்படுத்ப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இதுதொடர்பாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உளளன.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இயற்கையின் பராமரிப்பில் முக்கிய விலங்காக யானை திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள முதுமலை மற்றும் ஆனைமலையில் யானைகள் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயற்கை சங்கிலி முறையில் யானைகளின் பங்கு மிகப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது.