"தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை என நயினார் நகேந்திரனை கண்டித்து ஓபிஎஸ் பகீர் புகார்களை அடுக்கியுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு பாஜகவுடன் இருந்த ஓபிஎஸ் ஒரேடியாக ஓரங்கட்டப்பட்டார். அதிமுகவிற்குள்ளும், கூட்டணிக்குள்ளும் நுழைந்து விட முயற்சித்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிமுக, பாஜக நிகழ்ச்சி மேடைகளிலும் ஓபிஎஸ்-க்கு இடம் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்த ஓபிஎஸ், பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போது நேரில் சந்தித்து பிரச்னையை சரிக்கட்டி விடலாம் என நினைத்த அவருக்கு பிரதமரை சந்திக்கக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இதுபற்றி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ஓபிஎஸ் என்னிடம் சொல்லியிருந்தால் நானே அனுமதி வாங்கி தந்திருப்பேன் என்று கூறியிருந்தார். இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் பொய் பேசுவதாக ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் "தன்னிடம் சொல்லியிருந்தால் மாண்புமிகு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்" என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை.

திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை ஆறு முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. இரா. வைத்திலிங்கம் மற்றும் கழக துணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. பி.எச். மனோஜ் பாண்டியன் ஆகியோரை கலந்தாலோசித்த பின்னர், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை சந்திக்க அனுமதி கேட்டு 24-07-2025 அன்று நான் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பப்பட்டது.

உண்மையிலேயே, திரு, நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை நான் சந்திக்க வேண்டுமென்ற விருப்பம் இருக்குமேயானால், நான் கைபேசியில் அழைத்த அழைப்பை பார்த்தோ அல்லது குறுஞ்செய்தியின் அடிப்படையிலோ என்னிடம் பேசியிருக்கலாம். அல்லது பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதற்கான எனது கடிதம்

ஏற்பாட்டினை செய்திருக்கலாம். ஆனால் எதையும் செய்யவில்லை. இதிலிருந்து, நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. எனவே, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களைச் சந்திப்பது தொடர்பாக நான் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களிடம் சொல்லவில்லை என்பது சரியல்ல, உண்மைக்கு புறம்பானது.

திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கிறார். ஆகவே, இனியாவது அவர் உண்மை பேச வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று அந்த அறிக்கையில் ஓபிஎஸ் விமர்சித்து இருந்தார்.