நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இன்று ஆஜரானார். 


இந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரைப் பார்த்ததாகவும், அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும் ஓபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார். இரண்டு மணி நேரம் தாண்டி விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இப்போது உணவு இடைவெளி விடப்பட்டுள்ளது. மீண்டும் 3 மணிக்கு விசாரணை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 


காலை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 2016 செப்டம்பர் 22ஆம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் தனக்கு தெரியாது எனவும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை தவிர அவருக்கு இருக்கும் வேறு உடல் உபாதைகள் குறித்து எதுவும் தெரியாது எனவும் ஓபிஎஸ் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரமும் தனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்திருக்கிறார். 






மேலும், ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்த தகவல்களை அப்போதைய சுகாதார துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மூலமாகவே தெரிந்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். காவேரி கூட்டம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது, அறிக்கை வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் என தெரிவித்திருக்கிறார். 


முன்னதாக, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய மரணத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக சில கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த 12ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. பல முறை ஆணையம் ஓபிஎஸ்க்கு சம்மன் அனுப்பியும் அவர் ஒரு முறை கூட நேரில் ஆஜராகமல் இருந்தார். இதுவரை 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அவர், 9வது முறையாக அனுப்பப்பட்ட பிறகு இன்று நேரில் ஆஜராகி இருக்கிறார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண