இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என தொடர் விடுமுறையை ஒட்டி சுமார் 3 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் இன்றுடன் விடுமுறை நாள் முடிவுக்கு வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் இன்று சென்னை திரும்ப உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதாக கூறி 102 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்த்களுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறி இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், “ பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதேபோல் வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இங்கு இயக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. அதையும் மீறி சிலர் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். அதேபோல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் வர இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை எழ கூடாது என்பதற்காக இப்படி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 


அதன்படி 102 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தவறு இழைத்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் தவறு செய்யாத பேருந்துகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உரிமையாளர்கள் முன்வைத்து வருகின்றனர். அவர்கள் வைக்கும் கோரிக்கையை நாங்கள் பரிசீலனை செய்து வரும் நிலையில் வேலை நிறுத்தம் வாபஸ் பெருவார்கள் என நம்பப்படுகிறது. வெளி மாநில பதிவு எண் கொண்டு இயக்கப்பட்ட பேருந்துகள், கூடுதல் கட்டணம், உரிமம் புதிப்பிக்காமல் பேருந்து இயக்கியது தொடர்பாக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பது தான் ஒரே நோக்கம். அதனால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தீபாவளியின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கூறப்பட்டது. அதன்படி தீபாவளி, பொங்கள் பண்டிகையின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதத்தில் மீண்டும் ஒரு சில நிறுவனம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. பொது மக்கள் பாதிக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்கும்” என கூறியுள்ளார். 


Omni Bus Strike: சொந்த ஊரில் இருந்து திரும்பும் மக்களுக்கு அதிர்ச்சி.. இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது..