திருவண்ணாமலையில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் கருமாங்குளம் நெடுஞ்சாலையில் பெங்களூர் நோக்கி திருவண்ணாமலையில் இருந்து டாடா சுமோ கார் சென்று கொண்டு இருந்தது. இந்த காரில் 8 நபர்கள் பயணம் செய்தனர். அதே சாலையின் எதிரில் பெங்களூரில் இருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலையை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த டாடாசுமோ கார் அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.


விபத்து குறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  மட்டும் மீட்பு படையினர் உடனடியாக விபத்தில் சிக்கி காரில் உயிருக்கு போராடிய 4 நபர்களை மீட்டு திருவண்ணாமலை  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதில் காரில் பயணம் செய்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 2 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 


அதேசமயம் அரசு பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி அனுமதிக்கப்படுள்ளனர். விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள்  திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


இதனிடையே மேலும் காரில் வந்தவர்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது  டாடா சுமோ காரில் பயணம் செய்த இளைஞர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர்கள் என்பது காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. இந்த விபத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று கடந்த 10 நாட்களுக்கு முன்பு செங்கம் பகுதியில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது அதில் 8 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொடர் விபத்துகளை தவிர்க்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.