Northeast Monsoon 2025 Start Date: தமிழ்நாட்டில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Continues below advertisement

வடகிழக்கு பருவமழை:

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 2 நாட்களில் நாட்டின் மீதமுள்ள பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை மேலும் விலகுவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உள்ளன. தெற்கு தீபகற்ப இந்தியா மற்றும் தெற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்காள விரிகுடாவில் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசுவதோடு, அதே காலகட்டத்தில் தென்கிழக்கு தீபகற்பப் பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கனமழை எச்சரிக்கை:

இதனிடையே மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த இரு தினங்களில் விலகக்கூடும்.  அதே சமயம், வடகிழக்கு பருவமழை, தமிழகம்-புதுவை-காரைக்கால் பகுதிகள், கேரளா – மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பிரதேச  பகுதிகளில் வரும் 16-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் -  பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, வரும் 19-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள – கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கையின்படி, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய   லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்,  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கான எச்சரிக்கை:

15-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,   இடி, மின்னலுடன் கூடிய   லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16-10-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,   இடி, மின்னலுடன் கூடிய   லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும்  காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம் என்ன?

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.