Is Night curfew effective? | இரவுநேரக் கொரோனா ஊரடங்கு, நோய் பரவலைக் கட்டுப்படுத்துமா?

ஐஷ்வர்யா சுதா Updated at: 19 Apr 2021 05:33 PM (IST)

ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அமெரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தபோது அது கொரோனா பரவலை கணிசமாகக் கட்டுப்படுத்தியது. ஆனால், அதே மாடல் இந்திய மாநிலங்களுக்குக் கைகொடுக்குமா? கொரோனாவைக் கட்டுப்படுத்துமா? புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?

இரவு ஊரடங்கு - மாதிரிப்படம்

NEXT PREV

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதைவிட கொரோனா நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதே நாட்டின் தற்போதையச் சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும். இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி மட்டும் 2,73,802 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொருத்தவரை நேற்று மட்டும் 10723 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 42 பேர் நோய் பாதிப்பால் மரணமடைந்துள்ளனர். கடந்த 14 நாட்களில் மட்டும் மாநிலத்தில் 91,644 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு அரசு வெளியிட்டப் புள்ளிவிவரங்களின்படி மொத்த கொரோனா பாதிப்பு 15879 மற்றும் நாளொன்றுக்குச் சராசரி பாதிப்பு எண்ணிக்கை 2500 என இருந்தது. 






இரவு நேர ஊரடங்கை அமலுக்கு கொண்டுவரும் மாநிலங்கள் அதனை கொரோனா ஊரடங்கு என பிரகடனப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.- பிரதமர் நரேந்திர மோடி


நோய்த்தொற்று ஏறுமுகமாகவே இருந்துவரும் நிலையில் அரசு தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கை வருகின்ற 20 ஏப்ரல் தொடங்கி அமல்படுத்தவுள்ளது. இதன்படி வாரநாட்களில் இரவு 10 மணிமுதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்குக்கு முன்பு இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்குகள்தான் முதலில் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 8 ஏப்ரல் அன்று நடந்த மாநில முதல்வர்களுடனான கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ‘இரவு நேர ஊரடங்கை அமலுக்குக் கொண்டுவரும் மாநிலங்கள் அதனை கொரோனா ஊரடங்கு என பிரகடனப்படுத்தக் கேட்டுக்கொள்கிறேன். இதன்வழியாக மக்களும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பார்கள்’ எனக் குறிப்பிட்டார்.


கொரோனா காலத்தில் உலகளாவிய இரவு நேர ஊரடங்குகள்   


உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படி ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் இருக்கும் ஒரு லட்சம் மக்களில் 100 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டால் அங்கே இரவு நேர ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரவேண்டும். ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகள் இதனைத் தங்களது நோய்த்தொற்றுப் பாதுகாப்புச் சட்டமாகவே அமலுக்குக் கொண்டுவந்துள்ளன. நோய்த்தொற்றுப் பெரும்பாலும் தனிப்பட்ட அளவில்தான் பரவுகிறது (Infection in private) என்கிற காரணத்தால் இரவுநேர ஊரடங்கை அந்த நாடுகள் வலியுறுத்துகின்றன.




ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை பரவத்தொடங்கிய காலத்தில் அங்கே ஆய்வு மேற்கொண்ட ஆக்ஸ்ஃபோர்ட், பிரிஸ்டோல் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இரவுநேர ஊரடங்கால் நோய் பாதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளதாக தங்களது ஆய்வு முடிவுகளில் குறிப்பிட்டிருந்தார்கள். 7 நாடுகளில் சுமார் 114 நிலப்பரப்புகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு அது. மேலும் குறிப்பிட்ட வணிகச் செயல்பாடுகளுக்குத் தடைவிதிப்பதும் நோய் பரவுதலைக் கட்டுப்படுத்துவதாக அவர்களது ஆய்வில் குறிப்பிட்டிருந்தார்கள்.


கனடாவில் கடந்த ஜனவரி தொடங்கி இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கிறது. இரவு 8 மணிமுதல் அங்கே ஊரடங்கு செயல்படுத்தப்படுகிறது. மக்களின் தொடர் அழுத்தத்தால் அந்த நாடு கடந்த மார்ச் மாதம் இரவு 9:30 மணி தொடங்கி ஊரடங்கு என அறிவித்த பிறகு அங்கே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததாகச் சொல்கிறார் மெக்கில் பல்கலைக்கழகத்தின் தொற்று ஆய்வாளர் ஜே காஃப்மென்.




நெதர்லாந்து ஆய்வாளர் அமினே கொர்பானி பிரான்ஸ் ஜெர்மனி நெதர்லாந்து பகுதியில் தொற்றுப்பரவல் மற்றும்
 வைரஸ் நகர்வைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருபவர். சுமார் 120 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட அவரது புள்ளிவிவரங்களின்படி எவ்வித கட்டுப்பாடுகளுமே இல்லாத காலக்கட்டத்தில் மேலே குறிப்பிட்ட நாடுகளில் நோய்த்தொற்று மிகவும் அதிகமாக இருந்துள்ளது அதுவே இரவு நேர ஊரடங்குடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால் இதிலும் ஒரு சவால் இருக்கிறது, இத்தனைக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகும் கூட வீரியமிக்க கொரோனா வைரஸ் வகையான B.1.1.7 பரவுதலைக் கட்டுப்பட்டுத்த முடியவில்லை என்கின்றனர் பிரான்ஸின் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வுக் கழக ஆராய்ச்சியாளர்கள்.


இந்திய நிலப்பரப்பில் இரவுநேர ஊரடங்கு எந்த அளவிற்கு வெற்றிபெறும்?


ஆனால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நிலப்பரப்பில் மக்கள் வசிப்பிடம் மற்றும் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் இந்திய நிலப்பரப்பின் மக்கள் அடர்த்தி மற்றும் வாழ்வியல் முறை வேறானவை. அதனால் மனிதர்கள் நடமாட்டமும் கூட நிலப்பரப்பு மற்றும் வாழ்வியல் முறைக்கு ஏற்ற வகையில் மாறுபடும்.  கூகுளின் மக்கள் நகர்வு (population mobility) புள்ளிவிவரப்படி ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் மக்களின் இரவு நேர நகர்வு பூங்காக்கள், வணிகக்கூடங்கள், மற்றும் மக்கள் வசிப்பிடப் பகுதிகளில் அதிகம் தென்படுகின்றன்.


அதுவே இந்தியாவைப் பொருத்தவரைக் கடந்த நான்கு நாட்களில் மக்கள் வசிப்பிடப் பகுதிகளில்தான் மக்கள் நகர்வு 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதற்கடுத்து சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்தகங்களில் மக்கள் நெருக்கம் 13 சதவிகிதம் அதிகமாகக் காணப்பட்டிருக்கிறது. பூங்காக்கள், அலுவலகங்கள் மற்றும் பொதுப்போக்குவரத்தில் சராசரி அளவைவிட மக்கள் நெருக்கம் குறைவாகவே தென்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் நகர்வு 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டுகளைப் பொருத்தவரை 13 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எவ்வித கட்டுப்பாடுகளும் இதுவரை விதிக்கப்படாததால் புள்ளிவிவரப்படி ஜம்மூ காஷ்மீரில்தான் நாட்டிலேயே அதிகமாக மக்கள் நகர்வு அதிகம் தென்படுகின்றது.




இப்படியிருக்க இரவுநேர ஊரடங்கு எந்த அளவுக்கு நோயைப்பரவலைக் கட்டுப்படுத்த உதவும்? , “ஓரளவுக்குத்தான் கைகொடுக்கும்” என்கிறார் வேலூர் கிருத்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் வைரஸ் ஆய்வாளருமான மருத்துவர் ஜேக்கப் ஜான்.



ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த எப்படி ஒரு ஆணுறைக் குறைந்தபட்சப் பாதுகாப்புக் கவசமாக இருக்கிறதோ அதுபோல கொரோனாவுக்கு எதிரான குறைந்தபட்ச பாதுகாப்புக் கருவியாக முகக்கவசம் இருக்கிறது- வைராலஜிஸ்ட் ஜேக்கப் ஜான்




குறைந்தபட்சம் நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பமே வைரஸ் பரவப்போதுமான ஊடகமாக உள்ளது.


”கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்படுத்துவதைப் பொருத்தவரை தடுப்பூசி, சமூக இடைவெளி என மேற்கத்திய மாடலைதான் நாம் பின்பற்றி வருகிறோமே தவிர, நமக்கான தனிமாடல் என எதுவும் கிடையாது. அந்த மாடலின் ஒருபகுதிதான் இந்த இரவு நேர ஊரடங்கு. மேற்கத்திய நாடுகளில் இரவுநேர வாழ்க்கை என்பதே தனிக் கலாச்சாரம். அங்கே இரவு நேரங்களில்தான் கொண்டாட்டங்கள் அதிகம் இருக்கும். இதன்வழியாகப் பரவலைக் கட்டுப்படுத்தத்தான் அங்கே இரவு நேர ஊரடங்குகள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டன. நமது இரவுநேர வாழ்க்கை வேறானது.


மெட்ரோ நகரங்களில் ஷாப்பிங் மால், தியேட்டர் உள்ளிட்ட பகுதிகளில்தான் மக்கள் நடமாட்டம் அதிகம் தென்படும், மற்றபடி இங்கே மேற்கத்திய நைட் லைஃப் என்பது மிகச் சொற்பம். எய்ட்ஸ் ஹெச்.ஐ.வி. வைரஸ் கூட உடலுறவு அல்லது ரத்தப் பரிமாற்றத்தால்தான் பரவும் என்னும்போது இன்ஃப்ளூயன்சா வைரஸ் போலத் தொடுதல், வியர்வை அல்லது இதர எச்சங்கள் எனக் குறைந்தபட்ச மனிதத்தொடர்பு (Physical contact) இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுகிறது. குறைந்தபட்சம் நான்கு பேர் இருக்கும் ஒரு குடும்பமே வைரஸ் பரவப்போதுமான ஊடகமாக உள்ளது. இப்படியான சூழலில் முழு லாக்டவுன் கூட நூறு சதவிகிதம் கைகொடுக்காது. இதில் இரவுநேர ஊரடங்கு என்பது மிகமிகக் குறைந்த அளவில்தான் உதவும்.


இதற்குப் பதிலாகச் சமூக இடைவெளியை மேலும் பாதுகாப்பானதாக்கலாம் (Safe Social Contacting). ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் பரவலைக் கட்டுப்படுத்த எப்படி ஒரு ஆணுறைக் குறைந்தபட்ச பாதுகாப்பு கவசமாக இருக்கிறதோ அதுபோல கொரோனாவுக்கு எதிரான குறைந்தபட்ச பாதுகாப்புக் கருவியாக முகக்கவசம் இருக்கிறது. நிரந்தரமாக முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கவேண்டும். அணியாதவர்களிடம் அரசு அபராதம் வசூலிக்கவேண்டும்.கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக் குறைந்தது என்கிற நம்பிக்கையில் மக்கள் முகக்கவசங்களை அணியத் தவறிய பிறகுதான் தொற்று எண்ணிக்கையும் அதிகரித்தது.  தொடர்ச்சியாக மேற்கத்திய மாடல்களைப் பின்பற்றுவதுத் தற்காலிகத் தீர்வாக மட்டுமே அமையும்” என்கிறார்.  


நிரந்தரமான தீர்வை நோக்கி நகருமா அரசு?


Also Read: நாங்கள் பார்த்த கொடுமைகளை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை’ - வைரலாகும் மருத்துவரின் வேண்டுகோள்..


 


 

Published at: 19 Apr 2021 04:50 PM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.