மன்னார்குடியில் வசிக்கும் பாபா பக்ருதீன் என்பவரது வீட்டில், இன்று காலை முதல், சென்னையிலிருந்து வந்த ஒரு ஆய்வாளர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவரிடம் விசாரணை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகன் பாபா பக்ருதீன் என்பவர், தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் அவர் தொடர்பில் இருக்கிறாரா என்பது குறித்தும், அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பான ஆவணங்கள், முக்கிய தடையங்கள் எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் என்ஐஏ அதிகாரிகள் சோதித்து வருகின்றனர். மேலும், அவரது தொலைபேசிகளை கைப்பற்றி, அவரது உரையாடல்கள் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏற்கனவே, கடந்த 2021-ம் ஆண்டு, பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என்ஐஏ அதிகாரிகளின் சோதனையை ஒட்டி, அவரது வீட்டு வாசலில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மன்னார்குடியில் காலை முதல் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.