இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் 105 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 1988 ஆம் ஆண்டு பாம்பன் சாலை பாலம் கட்டும் வரை ராமேஸ்வரம் தீவிற்கும் மண்டபத்திற்கும்  தனித்தன்மை வாய்ந்த முக்கிய போக்குவரத்து வழியாக இருந்தது.

 

பழைய ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வந்தன. அதனால் ரயில்கள் மிக மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ரயில்களை விரைவாக இயக்கவும் அதன் மூலம் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தவும் நவீன புதிய பாலம் கட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு எடுத்தது.

 



தற்போது புதிய ரயில் பாலம் 2.05 கிமீ தூரத்திற்கு பாம்பன் கடலில் ரூபாய் 535 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானத்தை ரயில்வே துறையின் துணை அமைப்பான ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனம் செய்து வருகிறது. இதுவரை 84 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன. புதிய பாலத்திற்காக கடலில் பல்வேறு சீதோஷ்ண நிலை சிரமங்களுக்கிடையே 101 தூண்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த தூண்களில் 99 இணைப்பு கிர்டர்கள் அமைக்க வேண்டும். இதில் இதுவரை 76 இணைப்பு கிர்டர்கள் அமைக்கப்பட்டு ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



கப்பல்கள் எளிதாக பாலத்தைக் கடக்கும் வகையில் செங்குத்தாக உயரும் மின்தூக்கி இணைப்பு கிர்டர் தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த மின்தூக்கி கிர்டரை பொருத்துவதற்கான மேடைகள் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பழைய பாலத்தில் கப்பல் செல்வதற்காக பாலத்தின் நடுப்பகுதி இணைப்பை திறக்க  இரு புறமும் மனித ஆற்றல் பயன்படுத்தப்பட்டு வந்தது‌ குறிப்பிடத்தக்கது.  புதிய பாம்பன் பாலப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்த புதிய பாலம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரயில் போக்குவரத்திற்கு தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்