ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.


ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்திருந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதேநேரத்தில், உரிய விதிகளுடன் புதியசட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் நீதிபதிகள் தீர்பளித்தனர். கடந்த அதிமுக அரசு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்கு எதிராக தடைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்துக்கான தடை உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி சஞ்சீப் பனர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.


 






இந்தநிலையில், ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்கும் புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


“ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும்” என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நலம்பர் 21 ஆம் தேதி "ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து" அவசர கதியில் சட்டம் ஒன்றை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியது.


அ.தி.மு.க. அரசின் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் கருத்துக்களை சார்பில் ஆணித்தரமாக தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய எடுத்துவைத்த போதிலும், "இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டம் நிறைவேற்றும் போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது" என்று கூறி, தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.


பொது நலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தருந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்வித தாமதமுமின்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றையதினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.


ஆகவே,  முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.