நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், “நீட் விலக்கு வேண்டும் என்பதுதான் அதிமுக உட்பட அனைத்து கட்சியின் நிலைப்பாடு. அதிமுக ஆட்சி நடந்தபோது சொன்னதுதான் நாங்கள் இப்போதும் சொல்வது. நீட் விலக்கு வேண்டுமென்றால், உச்சநீதிமன்றத்தில்தான் சட்டரீதியாக விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் உண்மையான வழி. இப்போது ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பி இருக்கிறார் என்றால், எந்த காரணத்திற்காக திருப்பி அனுப்பினார் என்பதை பார்க்க வேண்டும். உச்சநீதிமன்றத்தை மேற்கோள்காட்டி ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பவுதற்கான அதிகாரம் இருக்கிறது. இதனால், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மாநில அரசு மீண்டும்  தீர்மாணமாக நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.


அப்போது ஆளுநர் இதை ஏற்றுக்கொண்டு குடியரசு தலைவருக்கு அனுப்பியாக வேண்டும். ஏற்கனவே அதிமுக அரசு அனுப்பிய தீர்மானத்தை குடியரசு தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார். அதில் இருந்து புதிதாக எதுவும் இந்த தீர்மாணத்தில் சேர்க்கப்படவில்லை. ஒரே ஒரு மாற்றமாக, குழு அமைத்து குழுவின் பரிதுரையின் பேரில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் நீட் விலக்கு பெறுவதுதான் உண்மையான வழி. மற்றவை எல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை” என தெரிவித்திருக்கிறார்.



முன்னதாக, தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டமசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. அதன்படி நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள மசோதாவில் 86 ஆயிரம் பேர்களின் கருத்துக்கள், நீதிபதி ராஜன் கமிட்டியின் கருத்து போன்றவை இணைக்கப்பட்டு உள்ளன.


இதுதொடர்பாக தமிழக அரசு அப்போது வெளியிட்ட அறிக்கையில், “நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு’ நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இந்த மசோதா பன்வாரிலால் புரோகித் தமிழக ஆளுநராக இருந்தபோது தமிழக அரசால் அனுப்பப்பட்டது. ஆனால் செப்டம்பர் 18-ம் தேதி தமிழகத்திற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார். இதையடுத்து நவம்பர் 27-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ரவியை சந்தித்து நீட் விலக்கு கோரும் மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், அனுப்பப்பட்ட மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளது விவாதத்தை உண்டாக்கி உள்ளது.