நீலகிரி மாவட்டத்தில் தோடர் மலை கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர்கள் மலர்ந்துள்ளன. 


பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் குறிஞ்சி மலர் இப்போது உதகை மண்டலம் பகுதிகளில் உள்ள மலைத் தொடரில் மலர்ந்துள்ளது. குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பலரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துவருகின்றனர்.


குறிஞ்சி மலரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. நீலகிரியில் மலர்ந்து நீலக்குறஞ்சி மலர்கள் அவ்வளவு அழகாக இருக்கின்றன. உதகை மண்டலத்தில் உள்ள பிக்கப்பத்தி மந்து அதன் அருகே உள்ள பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் பூத்திருப்பது ஊதா நிறத்தில் மலை இருப்பதுபோல காட்சியளிக்கிறது. 


கடந்த 2022-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் அருகில் உள்ள கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மலையோர பகுதிகளில் குறிஞ்சி மலர்கள் மலர்ந்திருந்தனர்.  சிக்மங்கலூர்(Chikmagalur), நீலகிரி மாவட்டத்தில் கோடநாடு மலைச் சரிவுகளில் குறிஞ்சி மலர்கள் பூத்தன. மக்கள் குறிஞ்சி மலர்களின் வருகையை கொண்டாடி வருகின்றனர்.


12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் என்பதால் மற்ற பூக்களில் இருந்து இது தனித்துவம் பெறுகிறது. உலகம் முழுவதும் 250 வகையான குறிஞ்சி மலர் செடிகள் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டின் நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மாவட்டங்களில் நீலக்குறிஞ்சி, கருங்குறிஞ்சி, வெள்ளை குறிஞ்சி என மூன்று வகையாக குறிஞ்சி மலர் செடிகள் காணப்படுகின்றன.


நீலகிரி மலைத் தொடரில்  நீல வண்ணத்தில் குறிஞ்சிப் பூக்கள் படர்ந்திருப்பதை பார்ப்பதற்கே வான் மேகங்களில் நீலம் பட்டு கடல் நீலமாக காட்சியளிப்பதை போல, நீளமான மலைத் தொடர்கள் முழுவதும் நீல நிறம் படர்ந்திருக்கிறது.






நீலகிரியில் காணப்படும் குறிஞ்சி மலர்கள் 3,6, 12, என்ற ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் தன்மை கொண்டுள்ளது.இவற்றில் சில வகைகள் ஆண்டுதோறும் பூக்கும். 


குறிஞ்சி மலர்கள்:


குறிஞ்சி அல்லது நீலக்குறிஞ்சியின் அறிவியல் பெயர் ’ஸ்ட்ரோபிலான்தஸ் குந்தியானஸ்’ (Strobilanthus kunthianus) எனப்படும்.  46 குறிஞ்சி மலர் வகைகள் இந்தியாவில் காணப்படுகின்றன். 3 அடி உயரமுள்ள குறிஞ்சி மலர் ஒரு குறுந்தாவரமாகும். இது  கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் முதல் 2,400 மீட்டர் உயரத்தில் உள்ள குளிர்ந்த வெப்பநிலை உள்ள பகுதிகளில் வளரக்கூடியதன்மை கொண்டவை. குறிஞ்சி மலர்கள் மலர்ந்த பிறகு, வாடி மண்ணில் மடிந்துவிடும். அதன் விதைகள் மண்ணில் வேரூன்றி மீண்டும் வளர தொடங்கும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இதிலிருந்து கிடைக்கும் தேன் மருத்துவ குணம் கொண்டது.